Asianet News TamilAsianet News Tamil

இந்திய அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த ஆஸ்திரேலியா!! தொடரை வெல்ல கோலி&கோ-விற்கு அருமையான வாய்ப்பு

உஸ்மான் கவாஜாவின் விக்கெட்டுக்கு பிறகு மேக்ஸ்வெல், ஹேண்ட்ஸ்கம்ப் ஆகிய இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 
 

australia set 273 runs as target for india in last odi
Author
Delhi, First Published Mar 13, 2019, 5:11 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் 4 ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வென்றதால் கடைசி போட்டியில் இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் களமிறங்கி ஆடிவருகின்றன. டெல்லி ஃபெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் கடைசி ஒருநாள் போட்டி நடந்துவருகிறது. 

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்க வீரர்கள் ஃபின்ச் - கவாஜா ஜோடி நிதானமாக தொடங்கி நல்ல தொடக்கத்தை அமைத்தனர். நிதானமாக ஆடிய ஃபின்ச்சை வேகப்பந்து வீச்சாளர்களால் வீழ்த்த முடியவில்லை. 15வது ஓவரை தனது முதல் ஓவராக வீசவந்த ஜடேஜா, அந்த ஓவரிலேயே ஃபின்ச்சை போல்டாக்கி அனுப்பினார். ஃபின்ச் 27 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பிறகு கவாஜாவுடன் ஹேண்ட்ஸ்கம்ப் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி கடந்த போட்டியை போலவே பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடியது. ராஞ்சியில் நடந்த மூன்றாவது போட்டியில் தனது முதல் சர்வதேச ஒருநாள் சதத்தை அடித்த கவாஜா, நான்காவது போட்டியில் 91 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்நிலையில், இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடி சதத்தை பூர்த்தி செய்தார். இது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது இரண்டாவது சதமாகும். இரண்டு சதங்களையும் இந்தியாவுக்கு எதிராக, அதுவும் ஒரே தொடரில் அடித்துள்ளார். கடந்த போட்டியில் 9 ரன்களில் சதத்தை தவறவிட்டார். அதில் சதமடித்திருந்தால், ஹாட்ரிக் சதமாகியிருக்கும். 

australia set 273 runs as target for india in last odi

சதமடித்தாலும் அதை பெரிய இன்னிங்ஸாக கவாஜா மாற்றவில்லை. சதமடித்த மாத்திரத்தில் சரியாக 100 ரன்களிலேயே கவாஜாவை புவனேஷ்வர் குமார் வீழ்த்தினார். இதையடுத்து களத்திற்கு வந்த ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் மேக்ஸ்வெல்லை ஒரே ரன்னில் வீழ்த்தினார் ஜடேஜா. 

மேக்ஸ்வெல்லின் விக்கெட்டுக்கு பிறகு ஹேண்ட்ஸ்கம்புடன் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஜோடி சேர்ந்தார். அரைசதம் அடித்த ஹேண்ட்ஸ்கம்பை 52 ரன்களில் ஷமி வீழ்த்தினார். இதையடுத்து ஸ்டோய்ன்ஸுடன் ஆஷ்டன் டர்னர் ஜோடி சேர்ந்தார். உஸ்மான் கவாஜாவின் விக்கெட்டுக்கு பிறகு மேக்ஸ்வெல், ஹேண்ட்ஸ்கம்ப் ஆகிய இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 

australia set 273 runs as target for india in last odi

கடந்த போட்டியில் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி இந்தியாவிடமிருந்து வெற்றியை பறித்த ஆஷ்டன் டர்னரை இந்த முறை அதை செய்ய குல்தீப் யாதவ் அனுமதிக்கவில்லை. 42வது ஓவரிலேயே 20 ரன்களில் டர்னரை வெளியேற்றினார் குல்தீப் யாதவ். மார்கஸ் ஸ்டோய்னிஸும் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். 

டெத் ஓவர்களை ஷமி, புவனேஷ்வர் குமார், பும்ரா இணைந்து சிறப்பாக வீசினர். ஸ்டோய்னிஸின் விக்கெட்டுக்கு பிறகு அடுத்த ஓவரிலேயே அலெக்ஸ் கேரியும் அவுட்டானார். ஷமியின் பந்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து கேரி ஆட்டமிழந்தார். 46வது ஓவரில் கேரி ஆட்டமிழக்க, அதன்பிறகு புவனேஷ்வர் குமாரும் பும்ராவும் இணைந்து எஞ்சிய 4 ஓவர்களை கட்டுக்கோப்பாக வீசி ரன்னை கட்டுப்படுத்தினர். ஆனாலும் ரிச்சர்ட்ஸனும் கம்மின்ஸும் இணைந்து சில பவுண்டரிகளை அடித்தனர். அதனால் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்துள்ளது.

தொடரை வெல்வதற்கு இந்திய அணிக்கு 273 ரன்கள் தேவை. 273 ரன்கள் கடினமான இலக்கு அல்ல. ஆனால் சவாலான இலக்குதான். எனினும் நல்ல பேட்டிங் ஆர்டரை கொண்ட இந்திய அணிக்கு இது எட்டக்கூடிய இலக்குதான் என்பதால் தொடரை வெல்ல இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பு. 

Follow Us:
Download App:
  • android
  • ios