2ம் தர அணியை அனுப்புது இந்தியா.. நீங்களும் அசிங்கமே இல்லாம ஆடுறீங்க..! இலங்கை கிரிக்கெட்டை விளாசிய ரணதுங்கா
இந்தியா 2ம் தர அணியை இலங்கைக்கு அனுப்பி இலங்கை கிரிக்கெட்டை அவமானப்படுத்திவிட்டதாக இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா விமர்சித்துள்ளார்.
விராட் கோலி தலைமையில் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், பும்ரா, ஷமி, ஜடேஜா ஆகியோர் அடங்கிய மெயின் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது.
அதனால் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இலங்கைக்கு ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி சென்றுள்ளது. இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் லெஜண்ட் கிரிக்கெட்டர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டு இலங்கைக்கு சென்றுள்ளார்.
வரும் 13ம் தேதி முதல் 25ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இந்தியா - இலங்கை இடையே 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது.
இந்நிலையில், 2ம் தர அணியை இந்தியா இலங்கைக்கு அனுப்பியிருப்பதாகவும், அதை எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொண்டு 2ம் தர அணியுடன் ஆட சம்மதித்த இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக விளாசியுள்ளார் இலங்கை அணிக்கு 1996ல் உலக கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரணதுங்கா.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அர்ஜூனா ரணதுங்கா, இந்தியா 2ம் தர அணியை இலங்கைக்கு அனுப்பியிருப்பது நமது கிரிக்கெட்டுக்கான(இலங்கை) அசிங்கம். வெறும் தொலைக்காட்சி மார்கெட்டிங்கிற்காக 2ம் தர அணியுடன் ஆட சம்மதித்தது இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தின் தவறு. இதற்கு வேறு யாரையும் குற்றம்கூற முடியாது. வலுவான அணியை இங்கிலாந்துக்கு அனுப்பிவிட்டு, பலவீனமான அணியை இலங்கைக்கு அனுப்பியுள்ளது இந்தியா. இது இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தவறுதான் என்று விமர்சித்துள்ளார் ரணதுங்கா.