மிகப்பெரிய தலையை தட்டி தூக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்..?
ஒவ்வொரு சீசனிலும் அதிரடியான மாற்றங்களை மேற்கொள்வதுதான் தங்களது அணியின் தோல்விக்கு காரணம் என்பதை உணராமல், தொடர்ச்சியாக மாற்றங்களை செய்துகொண்டே இருக்கும் பஞ்சாப் அணி, புதிய தலைமை பயிற்சியாளருக்கான தேடுதல் வேட்டையை நடத்திவருகிறது.
ஐபிஎல்லில் 12 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் ஐபிஎல்லின் வெற்றிகரமான அணிகளாக திகழ்கின்றன. இந்த 2 அணிகளும் கோப்பைகளை அள்ளும் நிலையில், ஆர்சிபி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய மூன்று அணிகளும் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை.
அந்த மூன்று அணிகளும் ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கி ஏமாற்றத்துடன் வெளியேறுகின்றன. முதல் கோப்பையை வெல்லும் முனைப்பில் ஒவ்வொரு ஆண்டும் அதிரடியான மாற்றங்களை இந்த அணிகள் மேற்கொண்டு வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் அதிரடியான மாற்றங்களை மேற்கொள்வதே ஆர்சிபி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளின் தோல்விக்கும் ஒரு காரணம். அடுத்த சீசனிற்கும் இந்த அணிகள் அதிரடியான மாற்றங்களை மேற்கொண்டுள்ளன. பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த சீசனில் இருந்த மைக் ஹெசன் அடுத்த சீசனில் ஆர்சிபி அணியின் இயக்குநராக செயல்படவுள்ளார்.
கடந்த இரண்டு சீசன்களாக பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த அஷ்வினை அந்த அணி கழட்டிவிட்டுள்ளது. பஞ்சாப் அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த மைக் ஹெசன், ஆர்சிபி அணியின் இயக்குநராகிவிட்டதால், புதிய தலைமை பயிற்சியாளரை தேடிவருகிறது பஞ்சாப் அணி.
இந்நிலையில், புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு சிலரை பரிசீலித்துவருகிறது பஞ்சாப் அணி. ஆண்டி ஃப்ளவர்(ஜிம்பாப்வே), டேரன் லேமன்(ஆஸ்திரேலியா) மற்றும் சிஎஸ்கேவின் பேட்டிங் பயிற்சியாளராக இருக்கும் மைக் ஹசி ஆகியோரின் பெயர்கள் அடிபட்ட நிலையில், அனில் கும்ப்ளேவிற்கும் வலைவீசுகிறது பஞ்சாப் அணி.
தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான கூட்டம் விரைவில் நடக்கவுள்ளது. அப்போது பஞ்சாப் அணியின் உரிமையாளர்களை கும்ப்ளே சந்தித்து பேசவுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் யார் தலைமை பயிற்சியாளர் என்பது அறிவிக்கப்படும்.
கும்ப்ளே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார். 2017 சாம்பியன்ஸ் டிராபியுடன் அவரது பதவிக்காலம் முடிந்தது. ஐபிஎல்லில் ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்ததோடு, ஆர்சிபி மற்றும் மும்பை அணிகளில் ஆலோசகராகவும் செயல்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டிலும் ஐபிஎல்லிலும் நல்ல அனுபவம் கொண்டவர் கும்ப்ளே என்பது குறிப்பிடத்தக்கது.