வெங்கடேஷ் பிரசாத்தை வம்பிழுத்து வாங்கிக்கட்டிய மோதல் சம்பவம்..! மனம் திறந்த பாக்., முன்னாள் வீரர் ஆமீர் சொஹைல்
1996 உலக கோப்பையில் தனக்கும் வெங்கடேஷ் பிரசாத்துக்குமான இடையேயான மோதல் சம்பவம் குறித்து ஆமீர் சொஹைல் மனம் திறந்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே அனல் பறக்கும். இரு அணி வீரர்களும் வெற்றிக்காக தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முனைவார்கள். ஆட்ட ரீதியாக மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையிலும் சில வீரர்களுக்கு இடையேயான மோதலும் நிகழும்.
அப்படி, காலத்தால் அழியாத, கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத சம்பவம் தான் 1996 உலக கோப்பையில் நடந்தது. வெங்கடேஷ் பிரசாத் - ஆமீர் சொஹைலுக்கு இடையேயான அந்த மோதலை கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
1996 உலக கோப்பை காலிறுதி போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, 50 ஓவரில் 287 ரன்களை குவித்து, 288 ரன்கள் என்ற கடினமான இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்தது. ஆனால் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் சயீத் அன்வரும் ஆமீர் சொஹைலும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 84 ரன்களை சேர்த்து நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர்.
தொடக்க ஜோடியை ஸ்ரீநாத் பிரித்தார். அன்வரை 48 ரன்களில் ஸ்ரீநாத் வீழ்த்த, தொடக்க ஜோடி உடைந்தது. அந்த நேரத்தில் பாகிஸ்தானின் கை ஓங்கியிருந்ததால், ஆணவமிகுதியில் இருந்த ஆமீர் சொஹைல், வெங்கடேஷ் பிரசாத்தின் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிவிட்டு, பந்தை போய் பொறுக்கு போ என்கிற ரீதியாக, பிரசாத்தை நோக்கி பேட்டை காட்டி ஸ்லெட்ஜிங் செய்தார். அதற்கு அடுத்த பந்திலேயே அமீர் சொஹைலை கிளீன் போல்டாக்கிய வெங்கடேஷ் பிரசாத், போடா போ என்று கையை அசைத்து செய்கை காட்டி பதிலடி கொடுத்தார். அதன்பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான், 248 ரன்கள் மட்டுமே அடித்து தோற்றது.
அந்த சம்பவம் குறித்து பேசியுள்ள ஆமீர் சொஹைல், அந்த சம்பவத்தில் எந்த உரையாடலுமே நிகழவில்லை. வெறும் சைகைகள் மட்டுமே. அதை அனைவரும் அவரவர்க்கு தேவையான மாதிரி புரிந்துகொண்டனர். நாங்கள் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. ஜாவேத் மியான்தத் ஸ்மார்ட்டான வீரர். பவுலரை செட்டில் ஆகவே விடக்கூடாது; அப்போதுதான் அவரது கவனத்தையும் நோக்கத்தையும் சிதைக்கமுடியும் என்று கூறுவார்.
அந்தவகையில், பவுலரை செட்டில் ஆகவிடக்கூடாது என்பதற்காக பவுண்டரி அடித்துவிட்டு அப்படி செய்தேன். சூழல் அப்படி இருந்தது. நான் அவரிடம் எதுவுமே சொல்லவில்லை. ஆனால் மக்கள் அதை பலவாறு புரிந்துகொண்டனர் என்று ஆமீர் சொஹைல் தெரிவித்தார்.