#ENGvsIND 2வது டெஸ்ட்: அவரை டீம்ல இருந்து தூக்குனா இவங்க 2 பேரும் சேர்ந்து ஆடலாம்.. ப்பா.. செம ஐடியாவா இருக்கே
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷன் குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிரா ஆனது. இந்தியா வெற்றி பெற்றிருக்க வேண்டிய அந்த போட்டியின் கடைசி நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் போட்டி டிரா என்று அறிவிக்கப்பட்டது.
எனவே 2வது போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் இரு அணிகளுமே உள்ளன. 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி காம்பினேஷனில் மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் சேர்க்கப்படாதது விமர்சனத்துக்குள்ளானது. அஷ்வின் சேர்க்கப்படாமல், அவரைவிட நன்கு பேட்டிங் ஆடக்கூடியவர் என்பதால் ஸ்பின்னராக ஜடேஜா எடுக்கப்பட்டார். பும்ரா, ஷமி, சிராஜ், ஷர்துல் தாகூர் ஆகிய 4 பவுலர்களுடன் இந்திய அணி ஆடியது இந்திய அணி.
சீனியர் ஸ்பின்னரான அஷ்வின் எந்தவிதமான கண்டிஷனிலும், எந்தமாதிரியான சூழலிலும் ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர் என்பதால் அவரை அணியில் எடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் உள்ளன. முன்னாள் வீரர்கள் பலரும் இதை வலியுறுத்திவருகின்றனர்.
அந்தவகையில், அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவருமே இணைந்து ஆடுவதற்கான ஆலோசனையை வழங்கியுள்ளார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா.
இதுகுறித்து பேசியுள்ள ஆகாஷ் சோப்ரா, 5 பவுலர்களுடன் ஆட வேண்டும். அதேவேளையில் பேட்டிங்கில் சமரசம் செய்துகொள்ளக்கூடாது. ஆனால் அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவருமே அடுத்த டெஸ்ட்டில் ஆட வேண்டும். அவர்கள் இருவரும் ஆட வேண்டும் என்றால், துரதிர்ஷ்டவசமாக ஷர்துல் தாகூரை நீக்க வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.