Asianet News TamilAsianet News Tamil

காசியை ஆட்சி செய்யும் கால பைரவர் பற்றி தெரியுமா? பலருக்கு தெரியாத வியக்க வைக்கும் தகவல்கள்..

காசியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கால பைரவர் சன்னதிக்கு தனிச்சிறப்பு உண்டு...

Kashi Interesting facts : The guardian deity of kashi kaala bhairava temiple in tamil Rya
Author
First Published Apr 18, 2024, 10:01 AM IST

காசியின் புனிதம் பற்றியும் கங்கையின் புனிதம் பற்றியும் பல விஷயங்களை நாம் கேள்விப்பட்டிருப்போம். சிலர் நேரிலும் சென்று பார்த்திருப்பார்கள். ஏழு ஜெனங்களிலும் செய்த பாவங்களைப் போக்கும் புண்ணிய தலமாக காசி கருதப்படுகிறது. அந்த வகையில் காசியின் மற்றொரு சிறப்பம்சம் கால பைரவர் சன்னதி. காசியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கால பைரவர் சன்னதிக்கு தனிச்சிறப்பு உண்டு... காசிக்குத் சென்றவர்கள் இரவு கால பைரவ பூஜை பார்க்காமல் திரும்புவதில்லை. கால பைரவர் காசி நகரத்தின் சேனாதிபதியாக இருக்கிறார்.

காசியில் இறந்தவர்களுக்கு யமபயம் கிடையாது. ஏனெனில் தண்டனை கொடுக்க யமனுக்கு அதிகாரமும் கிடையாது. காலனின் அதிகாரம் பைரவர்களுக்குக் கிடைத்தால் கால பைரவர் என்று  அழைக்கப்படுகிறார்.

அமர்நாத் யாத்திரை 2024 தேதிகள் அறிவிப்பு : எப்படி பதிவு செய்வது? தேவையான ஆவணங்கள் என்னென்ன?

பிரம்மாவின் சிரசு கபாலமாக மாறி, பிரமஹத்தி தோஷத்திற்கு பைரவர் ஆளாகி முடிவில் காசி மாநகர எல்லையில் கால் வைத்தபோது சிவபெருமான் காட்சி தந்து பிரமஹத்தி தோஷத்தை நீக்கி காசிமாநகர காவல் தெய்வமாக எழுந்தருள அருள்புரிந்தார். இன்றும் காசி மாநகரம்  பைரவர் ஆட்சி செய்யும் இடமாக உள்ளது. காசிமாநகர எல்லையில் எட்டு திக்கிலும் அஷ்ட பைரவர்கள் எழுந்தருளி எல்லையை  பாதுகாத்து வருகின்றனர்.

காசி அனுமன் காட்டில் உருபைரவர் ரிஷப வாகனத்தில் தென்கிழக்கு மூலையிலும்,ஸ்ரீதுர்க்கை கோவிலில் சண்ட பைரவர் மயில் வாகனத்தில்  தெற்கு மூலையிலும், விருத காலர் கோவிலில் அன்ன வாகனத்தில் கிழக்கு மூலையில் அசி தாங்க பைரவரும், லாட் பஜாரில் கபால பைரவர்  யானை வாகனத்தில் வடமேற்கு திசையிலும், ஸ்ரீகாமாட்சி ஆலயத்தில் கருட வாகனத்தில் குரோதன பைரவர் தென்மேற்கு திசையிலும்,  பீமசண்டியில் குதிரை வாகனத்தில் உன்மத்த பைரவர் மேற்கு திசையிலும், திரிலோசன சங்கமத்தில் வடகிழக்கு திசையில் சம்ஹார பைரவர் நாய் வாகனத்திலும், பூத பைரவரத்தில் சிங்க வாகனத்தில் வடக்கு திசையில் பீஷண பைரவர் ஆகிய அஷ்ட பைரவரும் எட்டு திக்கிலும்  எழுந்தருளி ஆட்சி செய்கின்றார்கள்.

அதனால்தான் காசி மாநகர எல்லையை விட்டு வெளியேறுகின்ற ஒவ்வொரு பொருளும் காசி கால பைரவர் முன் அனுமதி பெற்றே வெளிவர வேண்டும். காசி மாநகர  எல்லையை தொடும்போது எமனும் திரும்பி போவார் என்பது ஐதீகம். அதனால்தான் என்னவோ காசி பைரவர் மஹா பைரவர் சன்னதிக்கு தனி  சக்தி உள்ளது. காசி கறுப்பு கயிறு எமபயம் நீங்கி வாழ வைக்கின்றது.

Peacock Feathers : மயில் இறகை வீட்டில் வைத்தால் நடக்கும் அதிசயம் உங்களை பிரம்மிக்க வைக்கும்!!

காசியில் பல்லிகள் ஒலிப்பதில்லை. காசி நகரைச் சுற்றி 45 கி.மீ எல்லை வரையில் கருடன் பறப்பதில்லை. இதற்கு ஒரு புராணக்கதையும் சொல்லப்படுகிறது. ராமர் ராவணவதம் செய்தபின் சேதுவில் சிவபூஜை செய்வதற்காக அனுமனைக் காசிக்குச் சென்று சிவலிங்கம் கொண்டு வரும்படி தெரிவித்தார். அனுமன் காசியை அடைந்தார். எங்கும் லிங்கங்கள் இருந்ததால்,. எது சுயம்புலிங்கம் என்று தெரியாமல் விழித்தார். அப்போது ஒரு சிவலிங்கத்திற்கு நேரே கருடன் வட்டமிட்டான். பல்லியும் நல்லுரை கூறியது. இந்த இரு குறிப்புக்களினால் அது சுயம்பு லிங்கம் என்று அறிந்த அனுமன் அந்தச் சிவலிங்கத்தைப் பெயர்த்து எடுத்துப் புறப்பட்டார்.

காசியின் காவலாகிய காலபைரவர் அது கண்டு கோபித்தார். என் அனுமதி பெறாமல் எப்படி நீ சிவலிங்கத்தை எடுக்கலாம்? என்று கூறி தடுத்தார். பைரவருக்கும் அனுமனுக்கும் கடும் போர் நடந்தது. அப்போது தேவர்கள் வந்து பைரவரை வணங்கி உலக நன்மைக்காக இந்த சிவலிங்கம் தென்னாடு போகிறது அனுமதிக்க வேண்டும் என்று வேண்டினார்கள். பைரவர் சாந்தியடைந்து சிவலிங்கத்தைக் கொண்டு செல்ல அனுமதித்தார்.

ஆனாலும் தம் அனுமதி பெறாது லிங்கத்தை எடுக்க முயன்ற அனுமனுக்குத் துணை புரிந்த கருடன் காசி நகர எல்லைக்குள் பறக்கக்கூடாது என்றும் பல்லிகள் காசியில் இருந்தாலும் ஒலிக்கக் கூடாது என்றும் பைரவர் சாபமிட்டார். அந்தச் சாபத்தின்படி இன்னும் காசி நகர எல்லைக்குள் கருடன் பறப்பதில்லை பல்லிகள் ஒலிப்பதில்லை என்று கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios