- Home
- Astrology
- Spiritual: சுமங்கலிகள் மொட்டை அடிப்பது சரியா, தவறா? சாஸ்திரம் சொல்வது என்ன? சுமங்கலிப் பெண்கள் அறிய வேண்டிய முக்கிய தகவல்.!
Spiritual: சுமங்கலிகள் மொட்டை அடிப்பது சரியா, தவறா? சாஸ்திரம் சொல்வது என்ன? சுமங்கலிப் பெண்கள் அறிய வேண்டிய முக்கிய தகவல்.!
Sumangali Pengal Mottai Podalama in Tamil: இந்து சாஸ்திரத்தில் சுமங்கலி பெண்கள் மொட்டை அடிப்பதற்கான சில விதிமுறைகள் கூறப்பட்டுள்ளது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Sumangali Pengal Mottai Podalama in Tamil
நாம் கோயில்களுக்கு செல்லும் பொழுது அங்கு பெண் பக்தர்கள் பலரும் தலை முடியை முழுமையாக சிரவர்த்தனம் செய்வதை (தலை முடியை முழுமையாக வழித்து மொட்டை அடிக்கும் பழக்கம்) பார்த்திருப்போம். ஆனால் இந்து சாஸ்திரங்கள் மற்றும் சம்பிரதாயங்களின்படி சுமங்கலி பெண்கள் தலை முடியை முழுமையாக நீக்குவது தவிர்க்கப்பட வேண்டும் என்று சாஸ்திர விதிகளும், நம்பிக்கைகளும் கூறுகின்றன. அதற்கு சாஸ்திரங்கள் கூறும் காரணங்களை இங்கு பார்க்கலாம்.
கூந்தல் என்பது அழகுக்கானது மட்டுமல்ல
பெண்ணின் கூந்தல் என்பது அழகுக்கானது மட்டுமல்லாமல், மங்களகரமானதாகவும், லட்சுமி கடாசிற்கும் அடையாளமாகவும் கருதப்படுகிறது. ஆண்களுக்கு மொட்டை அடிப்பதும், பெண்களுக்கு நுனி முடியை மட்டும் வெட்டுவதே வழக்கம். மிகக் கடுமையான பாவ பிராயச்சித்தங்கள் அல்லது முக்கிய நேர்த்திக்கடன்களின் போது சுமங்கலி பெண்கள் முழுமையாக மொட்டை அடிப்பதற்கு பதிலாக நுனி முடியை மட்டும் ஒரு அங்குலம் வெட்டி சமர்ப்பிப்பதே போதுமானது என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.
சுமங்கலி இலட்சணம்
சுமங்கலியாக இருக்கும் பெண்கள் எப்போதும் கூந்தலை அலங்கரித்துக் கொண்டும், திலகம், மலர் மற்றும் மங்களப் பொருட்களுடன் திகழ்வது ‘சுமங்கலி இலட்சணம்’ என்று அழைக்கப்படும். திருப்பதி போன்ற புண்ணியத்தலங்களுக்கு செல்லும் பெண்கள் அங்கு நேர்த்திக் கடனுக்காக மொட்டை அடிக்கிறார்கள். கணவன் உயிருடன் இருக்கும் பொழுது சுமங்கலி பெண்கள் விருப்பப்பட்டு முழுமையாக மொட்டை அடிப்பது சாஸ்திரப்படி தவிர்க்கப்பட வேண்டும் என்று பெரியோர்கள் கூறுகின்றனர்.
வேணி தானம் செய்வது சிறந்தது
கடுமையான நோய் தீர வேண்டும் என்றோ அல்லது பெரிய பிரார்த்தனைகளுக்காகவோ நேர்ந்து கொண்டால் மட்டுமே கணவரின் முழு சம்மதத்துடன் மொட்டை அடித்துக் கொள்ள வலியுறுத்தப்படுகிறது. சுமங்கலி பெண்கள் இறைவனுக்கு முடி காணிக்கை செலுத்த விரும்பினால் முடியின் நுனி பகுதியை மட்டும் ஒரு சிறிய பகுதியை வெட்டி இறைவனுக்கு சமர்ப்பிக்கலாம். இதற்கு ‘வேணி தானம்’ என்று பெயர். சுமங்கலி பெண்கள் மொட்டை அடிப்பது கணவனின் ஆயுளுக்கும் குடும்பத்தின் மங்களத்திற்கும் உகந்ததல்ல என்பதே பாரம்பரிய நம்பிக்கை.
பாரம்பரிய வழக்கம் இருந்தால் தொடரலாம்
காஞ்சி மகா பெரியவர் போன்ற ஆன்மீக வழிகாட்டிகள் மற்றும் சாஸ்திர அறிஞர்களின் கூற்றுப்படி, “சுமங்கலி பெண்கள் தலைமுடியை முழுமையாக மொட்டை அடிக்க வேண்டியது இல்லை. இறைவனுக்கு கூந்தலை அர்ப்பணிக்க விரும்பினால், கணவனின் அனுமதியோடு வேணி தானம் செய்வதே (கூந்தலின் நுனிப்பகுதியில் சிறிதளவு நறுக்குவதே) சரியான முறையாகும். குலதெய்வங்கள் மற்றும் பிற தெய்வங்களுக்கு மொட்டை அடிக்கும் பாரம்பரிய பழக்கம் இருந்தால் மட்டுமே அதை தொடரலாம். எந்த ஒரு பாரம்பரியமும் இல்லாத பட்சத்தில் பொதுவான சாஸ்திர விதிகளின்படி சுமங்கலி பெண்கள் மொட்டை அடிப்பதை தவிர்க்க வேண்டும்.

