கருணாநிதியை இணையத்தில் அவதூறாக விமர்சித்த துரைமுருகன்... சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிமன்றம்..!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை யூடியூபில் அவதூறாக விமர்சித்திருந்த யூடியூபர் துரைமுருகன் பாண்டியன் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருச்சியில் சில தினங்களுக்கு முன்பு மிரட்டல் வழக்கில் சாட்டை என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் துரைமுருகன் பாண்டியன் என்பவர் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் துரைமுருகன் ஜாமீன் பெற்ற நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியை அவதூறாக பேசி யூடியூபில் வீடியோ வெளியிட்ட துரைமுருகனை போலீஸார் கைது செய்தனர். கருணாநிதி குறித்து இணையதளத்தில் அவதூறு பரப்பியதாக துரைமுருகன் பாண்டியன் மீது ஜூன் 11 அன்று திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் ராஜசேகர் என்பவர் புகார் கொடுத்திருந்தார்.
அந்தப் புகாரில், “முன்னாள் முதல்வர் கருணாநிதியை மற்ற குழந்தைகளுடன் இணைத்தும் பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பூவை இணைத்தும் தவறான கருத்துக்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இதைக் கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்” என்று வழக்கறிஞர் ராஜசேகர் புகாரில் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் துரைமுருகன் பாண்டியன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கில் திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட துரைமுருகனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. இதையடுத்து துரைமுருகன் லால்குடியில் உள்ள கிளை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.