இரட்டை தலைமைதான் வேண்டும் என்று ஓபிஎஸ் தெரிவித்துவிட்டார். அதுபோல இபிஎஸ் தன்னுடைய நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பற்றி எழும் நிலையில். ஓ. பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் அவரைச் சந்தித்து பேசி வருகிறார்கள். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் ராமச்சந்திரன் ஓபிஎஸ்ஸைச் சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அதிமுகவில் உட்கட்சி தேர்தல் நடத்திதான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்பட்டனர். இரட்டை தலைமை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சென்று கொண்டிருந்தது. ஆனால், திடீரென்று ஒற்றை தலைமை வேண்டும் என்று சில இரண்டாம் கட்டத் தலைவர்கள் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.

குறிப்பாக அந்த இரட்டையர்கள்தான் கட்சியில் பிளவு ஏற்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒற்றைத் தலைமை விவகாரத்தில் இரட்டை தலைமைதான் வேண்டும் என்று ஓபிஎஸ் தன்னுடைய கருத்தை தெரிவித்துவிட்டார். அதுபோல இபிஎஸ் தன்னுடைய நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும். இதுவரை எந்த நிலைப்பாட்டையும் இபிஎஸ் தெரிவிக்காமல் இருப்பது ஏன்? அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும்தான் ஒற்றை தலைமை குறித்து பேசி முடிவெடுக்க வேண்டும். இரண்டாம் கட்டத் தலைவர்கள் எல்லாம் அதைப் பற்றி பேச கூடாது. ஓபிஎஸ் வீட்டில் இருக்கும் நாங்களெல்லாம் இரட்டை தலைமைதான் வேண்டும் என்று சொல்கிறோம். 

அதிமுகவில் இரண்டாம் கட்ட தலைவர்களாக இருக்கும் இரண்டு பேர்தான் அதிமுகவில் பிளவு ஏற்படுத்தும் வேலைகளை பார்த்து வருகிறார்கள். முதலில் சசிகலாவை கட்சியை விட்டு அனுப்பினார்கள். பிறகு திட்டம் போட்டு டிடிவி தினகரனை நீக்கினார்கள். பிறகு ஓபிஎஸ் உடன் இணைந்து நான்கு ஆண்டுகள் ஆட்சியில் அமர்ந்தார் இபிஎஸ். விரைவில் இபிஎஸ்க்கும் அந்த இருவரால் இதே நிலைமைதான் ஏற்படும். ஓபிஎஸ் ஆதரவாளர்ளான நாங்கள் ஒரு தலைபட்சமாக செயல்படவில்லை. ஓபிஎஸ், இபிஎஸ் இரண்டு பேரும்தான் எங்கள் தலைவர்கள் என்று நினைக்கிறோம்” என்று குன்னம் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.