சிஏஏ அமலானபின் ‘ஆதித்யநாத் அரசு அசுரவேகம்’: இந்துக்கள் பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பியது உ.பி அரசு ....
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து அகதிகளாக வந்து தங்கியுள்ள இந்துக்கள் குறித்த பட்டியலை உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரப்பிரதேச அரசு அனுப்பிவிட்டது.
குடியுரிமைத் திருத்தச்சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது, இந்த சட்டம் கடந்த 10-ம் தேதி முதல் நாடுமுழுவதும் அமலாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த சட்டத்தின்படி வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியான துன்புறுத்தல்களைச் சந்தித்த இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பார்ஸிக்கள், பவுத்தர்கள், ஜைனர்கள் ஆகியோர் அகதிகளாக இந்தியாவில் இருந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்கிறது.
இந்த சட்டத்தின்படி ஒவ்வொரு மாநிலத்திலும் அகதிகளாக இருக்கும் இந்த 3 நாடுகளைச் சேர்ந்த 6 மதத்தினரின் பட்டியலை மாநில அரசுகள் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வருகின்றன.
அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் அகதிகள் முகாமில் இருக்கும் இந்த 3 நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள் பட்டியலை மட்டும் உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரப்பிரதேச அனுப்பிவிட்டது. ஏறக்குறைய 19 மாவட்டங்களில் 40 ஆயிரம் முஸ்லிம்கள் அல்லாத மக்கள் வசிக்கின்றனர்.
ஆக்ரா, ரே பரேலி, சஹரான்பூர், கோரக்பூர், அலிகர், ராம்பூர், முசாபர்நகர், ஹப்பூர், மதுரா, கான்பூர்,பிரதாப்கர், வாரணாசி,அமேதி, ஜான்ஸி உள்ளிட்ட மாவட்டங்களில் அகதிகள் அதிகமாக உள்ளனர்
இதுதவிர பில்பிட் மாவட்டத்தில் மட்டும் 35 ஆயிரம் பேர் சட்டவிரோதமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களை 2-வது கட்டமாக கணக்கெடுக்கும் பணியில் உத்தரப்பிரதேச அரசு ஈடுபட்டுள்ளது.