நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட பிரிவினைவாதி யாசின் மாலிக் காஷ்மீரில் கைது!!
ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக். ஜம்மு காஷ்மீர் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக போராடி வருகிறார் யாசின் மாலிக். இவர் கடலூரில் நடந்த நாம் தமிழர் கட்சியின் உள்ளரங்கு கூட்டத்தில் கூட கலந்துகொண்டார்.
கடந்த 2013ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் சார்பில் கடலூரில் நடக்க இருந்த பொதுக்கூட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டதால் ஒரு மண்டபத்தில் உள்ளரங்கு கூட்டமாக நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் யாசின் மாலிக் கலந்துகொண்டு பேசினார். அந்த கூட்டத்தில் காஷ்மீரில் நடக்கும் விடுதலை போராட்டமும் தமிழர்களின் இன விடுதலை போராட்டமும் ஒரே மாதிரியானவை என பேசினார்.
யாசின் மாலிக்கும் அவரது இயக்கமும் காஷ்மீர் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக போராடிவருகிறது. இந்நிலையில், காஷ்மீரில் நடக்கும் முழு அடைப்பு போராட்டம் தீவிரமடையாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யாசின் மாலிக் கைது செய்யப்பட்டுள்ளார்.
காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம் நடந்துவருகிறது. போராட்டம் தீவிரமடைவதைத் தடுக்கும் வகையில் பிரிவினைவாத இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹுரியத் மாநாடு அமைப்பின் தலைவர் மீர்வைஸ் உமர் பாரூக், சையது அலி ஷா கிலானி ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணித் தலைவர் யாசின் மாலிக்கையும் போலீஸார் கடந்த 21ம் தேதி கைது செய்தனர்.