ஸ்மார்ட் கார்டு இல்லன்னாலும் ரேஷன் பொருள் வழங்கப்படும்! அமைச்சர் காமராஜ் தகவல்!
ஸ்மார்ட் கார்டு இல்லாவிட்டாலும் அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 2 கோடி குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக குடும்ப அட்டைகள் புதுப்பிக்கப்படாமல், ஒவ்வோர் ஆண்டும் உள்தாள் ஓட்டி கால நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது.
போலி குடும்ப அட்டைகளை நீக்கி முறைகேடுகளைத் தடுக்கவும் அத்தியாவசியப் பொருள்கள் கொள்முதலில் தமிழக அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களைத் தவிர்க்கவும் ரேஷன் ஸ்மார்ட் கார்டு திட்டம் கொண்டு வரப்பட்டது.
பழைய குடும்ப அட்டைகளுக்கு பதில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி சென்னை கொரட்டூரில் தொடங்கி வைத்தார்.
கிட்டத்தட்ட ஓர் ஆண்டாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.. இந்நிலையில் வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் ரேஷன் பொருட்களை வாங்க ஸ்மார்ட் அட்டைகள் கட்டாயம் என கடந்த 25 ஆம் தேதி அன்று தமிழக உணவுத்துறை அமைச்சகம் கூறியிருந்தது. ஆனால், ஸ்மார்ட்டு கார்டு இல்லாவிட்டாலும், அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ்
தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஸ்மார்ட் கார்டு திட்டத்தை முழுமையாக அமல்படுத்துவது கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அது தொடர்பாக 99 சதவீத பணிகள் முடிந்து விட்டன.
மார்ச் மாதத்துக்குள் பணிகள் முழுவதும் முடிவடையும். அப்படி இந்த திட்டத்தை விரைந்து முடிப்பதுதான் அரசின் எண்ணம். சீரிய முறையில் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கண்டிப்பாக மார்ச் 1 ஆம் தேதிக்குள் பணிகள் முவைடையும். அதே நேரத்தில் ஸ்மார்டு கார்டு இல்லாவிட்டாலும் அனைவருக்கும் ரேஷன் பொருட்களும் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.