தேமுதிக பொருளாளர் பிரேமலதா ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

அதிமுக கூட்டணியில் இருந்தாலும் தேமுதிகவை ஆளுங்கட்சி கண்டுகொள்ளவில்லை என்ற புகைச்சலில் தேமுதிக உள்ளது. தங்கள் எதிர்ப்பை அவ்வப்போது தேமுதிக பொருளாளர் பிரேமலதா வெளிப்படுத்தி வருகிறார். 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயார் என்றும் பேசிவருகிறார். கூட்டணி பேச்சுவார்த்தையை உடனே அதிமுக தொடங்க வேண்டும் என்று பிரேமலதா கூறிவருகிறார். ஆனால், பிரேமலதாவின் கருத்துக்கெல்லாம் அதிமுகவிலிருந்து எந்தப் பதிலும் வருவதில்லை. எனவே, அதிமுக - தேமுதிக கூட்டணி ஏற்படுமா என்ற கேள்வி நீடிக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


இதற்கிடையே இந்த முறை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட பிரேமலதா ஆயத்தம் ஆகிவருகிறார். விஜயகாந்த உத்தரவிட்டால் தேர்தலில் போட்டியிட தயார் என்று கூறிவரும் பிரேமலதா, இந்த முறை நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவார் என்று தேமுதிகவினர் கூறிவருகிறார்கள். இந்நிலையில் ஜெயங்கொண்டத்தில் தேமுதிக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரேமலதா ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிடுவது குறித்து பேசப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் தேமுதிக மாநில கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் விஜயகண்ணன் பேசுகையில், “ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதியை பொறுத்தவரை பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே அவரை வெற்றிபெறச் செய்வதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும்” என கட்சியினர் முன்னிலையில் பேசினார். எனவே ஜெயங்கொண்டம் தொகுதியில் பிரேமலதா போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.