திடீர்ன்னு லண்டனுக்கு பறக்கிறார் ஸ்டாலின்! மோடி கையில் அனுமதி ஃபைல்..! தடதடக்கும் அரசியல்
மத்திய அரசை வைபரேஷன் மோடிலேயே எப்பவும் வைத்திருக்கின்ற ஒரே மாநிலமென்றால் அது இன்னைய தேதிக்கு தமிழ்நாடு மட்டும்தான்
மத்திய அரசை வைபரேஷன் மோடிலேயே எப்பவும் வைத்திருக்கின்ற ஒரே மாநிலமென்றால் அது இன்னைய தேதிக்கு தமிழ்நாடுதான். மேற்கு வங்காள தீதியை எல்லாம் தள்ளி நிற்க வைத்துவிட்டு, தமிழக முதல்வர் ஸ்டாலின் பட்டாஸ் கெளப்புகிறார் அடுத்தடுத்த பரபரப்புகளின் மூலம்.
அதாவது தமிழ்நாட்டுக்கும் – கேரளாவுக்கும் இடையில் உள்ள தண்ணீர் தாவாக்களிலேயே ரொம்ப முக்கியமானது ‘முல்லை பெரியாறு விவகாரம்’தான். அந்த முல்லைப் பெரியாறு அணையின் நாயகர் ஜான் பென்னிகுயிக். அவரது சிலையை, அவரது சொந்த மண்ணான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகர மையப்பூங்காவில் தமிழக அரசு சார்பில் நிறுவப்படும்! என்று சில நாட்களுக்கு முன் சட்டசபையில் முதல்வர் அறிவித்தார். ‘இங்கிலாந்துல போயி சிலை நட போறாங்களாமா?’ என்று இதை அ.தி.மு.க.வினர் சிலர் கிண்டலடித்தனர் அப்போது. ஆனால் இதையெல்லாம் மைண்ட் பண்ணிக்கவில்லை முதல்வர்.
இந்த நிலையில், தான் விடுத்த அந்த அறிவிப்பை உறுதி செய்யும் முகமாக இங்கிலாந்துக்கு பறக்கிறார் விரைவில் முதல்வர். அங்கே சிலை அமைய இருக்கும் இடத்தை பார்வையிடுகிறார், ஆய்வு நடத்துகிறார். கையோடு அடிக்கல் நாட்டுவிழாவையும் நடத்துகிறார். இதில் ஹைலைட்டாக இங்கிலாந்து பிரதமரையே கலந்து கொள்ள வைப்பதற்காக அவரையும் சென்று சந்திக்க இருக்கிறாராம் முதல்வர். இதற்காக இங்கிலாந்தில் பூர்வாங்க பணிகளை மெயில் மூலமாக துவக்கிவிட்டது தமிழக அரசு.
இந்தியாவை பொறுத்தவரையில் மாநில முதல்வர்கள் அயல்நாடு செல்கையில் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டியது மரபு. அதற்காக தமிழக முதல்வரின் வெளிநாடு பயண திட்டம் குறித்த விபரங்கள் அடங்கிய ஃபைலானது மத்திய உள்துறை, வெளியுறவுத்துறை மற்றும் பிரதமரின் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. மூன்று துறைகளின் அனுமதி கிடைத்ததும் முதல்வரின் பயணத்திட்டம் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு, அவர் கிளம்ப தயாராவார்! என்று தகவல்.
இச்சூழலில், எப்படியாவது மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையில் சிண்டு முடிந்து, சிக்கலை உருவாக்கி, அதில் அரசியல் குளிர் காய நினைக்கும் சிலர் “தன் அரசை ‘ஒன்றிய அரசு’ என்று சொல்லி சீண்டி வரும் ஸ்டாலினின் இந்த மிக முக்கிய பயணத்துக்கான ஃபைலை பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட மத்திய அரசு அனுமதிக்குமா? டவுட்டுதான்” என்று கிளப்பிவிடுகின்றனர் புகைச்சலை.
ஆனால் ‘மத்திய அரசு ஒரு காலத்திலும் அப்படியெல்லாம் குரோதம் காட்டாது. முழுமையான உதவிகளை தமிழக முதல்வருக்கு செய்து கொடுக்கதான் முன் வரும்.’ என்கிறார்கள் அரசியல் முக்கியஸ்தர்கள்.
ஒற்றுமை ஓங்குக!