சென்னையை போல மதுரையிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு தகவல்..!
மதுரையில் தேவைப்படும் பட்சத்தில் முழு ஊரடங்கு உத்தரவு குறித்து முதல்வரே அறிவிப்பார் என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் தேவைப்படும் பட்சத்தில் முழு ஊரடங்கு உத்தரவு குறித்து முதல்வரே அறிவிப்பார் என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களுக்கு தானியங்கி, கை சுத்திகரிப்பான் கருவியை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பங்கேற்று கை சுத்திகரிப்பான் கருவியில் காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு வழங்கினார்.
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்;- முதல்வரின் பல்வேறு நடவடிக்கைகளால் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்படுகிறது. மதுரை மாவட்டத்தைப் பொறுத்த வரையிலும், வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தெரிகிறது.
அப்படி வருவோரை சோதனைச் சாவடிகளில் தீவிரமாகக் கண்காணித்து பின்னர் பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் தளர்வுகளை முறையாகப் பயன்படுத்த வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க 10 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் வந்து செல்லும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் தானாக இயங்கும் சானிடைசர் இயந்திரங்களைப் பொருத்த உள்ளோம். நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், திருமங்கலத்தில் மதியம் 2 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என நேரக் கட்டுப்பாடு விதித்து செயல்படுத்த வர்த்தக சங்கத்தினர் முன்வந்துள்ளனர். இது வரவேற்கத்தக்கது. அது போல அனைத்து வர்த்தக சங்கத்தினரிடமும் ஆலோசித்து, மாநகரப் பகுதியிலும் நேரக் கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றி முடிவெடுக்கப்படும்.
மேலும், பேசிய அவர் மதுரை மாவட்டத்தில் நோய்த் தொற்று நிலைமை குறித்து தினமும் முதல்வர் தொடர்ந்து கேட்கிறார். நிலைமைக்கு ஏற்றவாறு ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி முதல்வர் தான் அறிவிப்பார் என்று அமைச்சர் கூறியுள்ளார்.