ஆளுநர் சந்திப்பில் அதிமுக தலைவர்களுடன் ஓபிஎஸ் ஏன் இல்லை..? வெளியான புதிய தகவல்..!
கோவையில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் ஓ.பன்னீர்செல்வம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் பெற்று வருகிறார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோவையில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் தங்கி புத்துணர்வு சிகிச்சை எடுப்பது வழக்கம். இதுவரை 5 முறைக்கு மேல் கோவை ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்தநிலையில் மீண்டும் ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக கடந்த 18 அன்று ஓ.பன்னீர்செல்வம் கோவைக்கு வந்தார். கோவை கணபதி பகுதியில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்துக்கு சென்ற ஓபிஎஸ், அங்கேயே தங்கினார். கடந்த 19-ஆம் முதல் அவருக்கு சிகிச்சைகள் தொடங்கின. இதன் காரணமாகத்தான் அதிமுக தலைவர்கள் தமிழக ஆளுநரைச் சந்தித்தபோது ஓபிஎஸ்ஸால் அதில் பங்கேற்க முடியவில்லை.
இந்த சிகிச்சை மையத்தில் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் மூலிகை குளியல், எண்ணெய் குளியல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் ஓபிஎஸ்ஸுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. பச்சைக் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட இயற்கை உணவுகளையே சாப்பிடுவதற்காக கொடுக்கிறார்கள். அவ்வப்போது காய்கறி சூப் வகைகள், தானியங்களால் செய்யப்பட்ட கஞ்சியும் உணவாக வழங்கப்படுகிறது. மேலும் மன அமைதிக்காக தியான பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இந்தச் சிகிச்சை இன்னும் 5 நாட்களுக்கு தொடர உள்ளது. சிகிச்சை முடிந்த பிறகு ஓபிஎஸ் சென்னை திரும்புவார் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.