குக்கருக்கு ஏன் வாக்கு போட்டிருக்காங்க தெரியுமா? செல்லூர் ராஜூவின் விளக்கம்!
ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட டிடிவி தினகரன் வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே முதலிடத்தில் இருந்து வருகிறார். அவர் போட்டியிட்ட சின்னம் கூட அவ்வளவு பிரபலமான சின்னம் இல்லை. முன்னர் நின்று போன இடைத்தேர்தலின் போது தொப்பியே வெற்றி பெறும் என்று முழங்கினார். இப்போது சின்னம் பெறுவதில் கூட பிரச்னை ஏற்பட்டது அவருக்கு.
தொப்பி கேட்டு கிடைக்காத நிலையில், தேர்தல் ஆணையம் ஏதோ ஒதுக்கிய ஒன்றில் இருந்து குக்கரைத் தேர்வு செய்தார். இப்போது குக்கர் பலரின் பிரஷரை எகிற வைத்து விட்டது. வாக்காளர்களின் நாடித் துடிப்பு எது என்பதைக் கண்டறிந்து, அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட தினகரன், இப்போது முன்னிலையில் இருக்கிறார்.
இந்நிலையில், இவ்வளவுக்கு வாக்குகள் வித்தியாசம், அதிமுக., வேட்பாளர் மதுசூதனனுக்கும் டிடிவி தினகரனுக்கு ஏன் ஏற்பட்டது என்பது குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகின்றன. இதில், அதிமுக.,வின் எனது ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள் என்று தினகரன் அடிக்கடி கூறி வந்தார். அந்த ஸ்லீப்பர் செல்கள் யார் என்று பலரும் யோசித்து வரும் நிலையில், இப்போது அமைச்சர்கள் சிலரின் செயல்பாடுகள் அதனை வெளிக்கொண்டு வருகின்றன.
முன்னதாக, முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையிலேயே அது தெரிந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். மதுரையைச் சேர்ந்த அதிமுக.,வினர் பணி செய்த தொகுதியில் இருந்து இந்த நிலவரம் துவங்கியது. அது செல்லூர் ராஜூ பொறுப்பில் தேர்தல் பணி செய்த தொகுதி. தங்க தமிழ்ச்செல்வன் அங்கே தினகரன் சார்பில் பணி செய்த பகுதி.
இந்நிலையில், குக்கருக்கு ஏன் இவ்வளவுக்கு அதிக அளவில் வாக்களித்திருக்கிறார்கள் என்று பலரும் கேட்டுக் கொண்டிருக்கும் போது, அமைச்சர் செல்லூர் ராஜூ உதிர்த்த வார்த்தைகள் இவை.... இரட்டை இலைக்கே நாங்கள் வாக்கு கேட்டோம்; குக்கருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறவில்லை எனக் கூறியிருக்கிறார் செல்லூர் ராஜூ. அதன்படி பார்த்தால், இரட்டை இலைக்கு வாக்கு போடுங்கள் என்று கேட்டதையே ஒரு பொருட்டாக மக்கள் எடுத்துக் கொள்ளாத போது, தாங்கள் ஒருவேளை குக்கருக்கு வாக்கு அளிக்காதீர்கள் என்று சொல்லியிருந்தால் மக்கள் இவ்வளவு ஓட்டு அளித்திருக்க மாட்டார்கள் என்று கூறுகிறார் போலும்!