‘அப்பா பெயர்’ தெரியாதவர்கள் தான் மதச்சார்பற்றவர்கள்....மத்திய அமைச்சர் பேச்சால் சர்ச்சை
மதச்சார்பற்றவர்கள் என சொல்லிக்கொண்டு இருப்பவர்கள் எல்லாம் அப்பா, அம்மா பெயர், அடையாளம் தெரியாதவர்கள் என்று மத்திய அமைச்சர் ஆனந்த குமார் ஹெக்டே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சர்
கொப்பல் மாவட்டம், குக்கனூரில் பிரம்மயுவ பரிசத் மற்றும் மகளிர் அமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய வேலைவாய்ப்பு மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆனந்த குமார் ஹெக்டே கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது-
அடையாளம் தெரியாதவர்கள்
தாங்கள் எந்த மதத்தையும் சாராதவர்கள் என்றும், முற்போக்கு சிந்தனைவாதிகள் என்றும் கூறி அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் அனைவரும் அப்பா, அம்மாவின் அடையாளம் தெரியாதவர்கள், பெயர் தெரியாதவர்கள். ரத்த உறவுகள் குறித்த அடையாளமும், முகவரியும் இல்லாதவர்கள். ஆனால், இந்த அடையாளங்கள் மூலம்தான் ஒருவருக்கு சுயமரியாதையை பெற முடியும்.
மகிழ்ச்சி அடைவேன்
ஆனால், ஒருவர் தான் முஸ்லிம், கிறிஸ்துவர், பிராமணர், லிங்காயத், இந்து என தன்னை மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் அடையாளப்படுத்திக் கொண்டால் நான் மகிழ்ச்சி அடைவேன். ஆனால், தான் மதச்சார்பற்றவர் எனக் கூறும்போதுதான் பிரச்சினையும், சிக்கலும் உருவாகிறது.
முற்போக்கு சிந்தனையாளர்களுக்கு தங்களின் வரலாறு, பாரம்பரியம், கலாச்சாரம் குறித்து தெரியாது. மனு தர்மம் என்று பழயதாகிவிட்டது, அதற்கு பதிலாக இப்போது அம்பேத்கர் தர்மத்தைப் பற்றி பேசுகிறார்கள்.
மாற்றம் வரும்
நான் அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்கிறேன். ஆனால், இதற்கு முந்தைய காலங்களில் காலத்துக்கு ஏற்ப அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்பட்டுள்ளது என்பதையும் உணர வேண்டும். எதிர்காலத்திலும் மாற்றப்படும். அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றவே நாங்கள் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கண்டனம்
மத்திய அமைச்சர் ஆனந்த குமாரின் பேச்சுக்கு எதிர்க்கட்சி தலைவர்களும், முற்போக்கு சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கொப்பல் நகரில் இந்திய மாணவர் அமைப்பினர் அமைச்சரின் பேச்சைக் கண்டித்து போராட்டமும் நடத்தினார்கள்.
விஷம் உமிழும் பேச்சு
அமைச்சர் ஆனந்த குமாரின் பேச்சுக்கு முதல்வர் சித்தராமையா கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “ ஆனந்த குமாரின் பேச்சு, அரசியலமைப்புச் சட்டத்தை அவமானப்படுத்தும் வகையில் இருக்கிறது. அவரின் நிலைக்கு ஏற்றார்போல் தரம்தாழ்ந்து பேச விரும்பவில்லை. எங்களின் கலாச்சாரமும், மொழியும், தரமும் எங்களுக்கு தெரியும். ஆனால், மத்திய அமைச்சராக இருந்து கொண்டு ஆனந்த குமார், விஷத்தை உமிழும் வகையில் பேசுகிறார்’’ என்றார்.
சர்ச்சை மனிதர்
உத்தர கன்னட தொகுதியில் 5 முறை பா.ஜனதா கட்சியின் எம்.பியாக ஆனந்த குமார் இருந்து வருகிறார். ஆனந்த குமார் சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன் தனது சொந்த ஊரான சிர்சி நகரில் தனியார் மருத்துவமனை டாக்டர்களை தாக்கியதால், டெல்லிக்கு 6 மாதம் பயணிக்க ஆனந்த குமார் தடை செய்யப்பட்டு இருந்தார்.
முஸ்லிம் மதத்தைக் குறித்து சர்ச்சைக் குரிய வகையில் கருத்துக்களை ஆனந்த குமார் கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி தெரிவித்தார். இதனால் குமார் மீது வழக்குப்ப திவுசெய்யப்பட்டு கடந்த அக்டோபர் 19-ந்தேதி குற்றப்பத்தரிகை தாக்கல் செய்யப்பட்டது.