எங்க தலைவர் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் அடுத்த பிரதமர்… கெத்து காட்டிய துரை முருகன்….
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் அடுத்த பிரதமர் என திமுக பொருளாளர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.
50 ஆண்டுகளாக திமுகவின் அசைக்க முடியாத தலைவராக இருந்த கருணாநிதி கடந்த மாதம் 7 ஆம் தேதி உடல்நலக்குறைவு மற்றும் முதுமை காரணமாக மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் கடந்த 28 ஆம் தேதி நடைபெற்ற பொதுகுழுக் கூட்டத்தில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அன்றே திமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருந்த துரை முருகன், அக்கட்சியின் பொருளாளாராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து திமுக நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் கருணாநிதியுடன் தான் இருந்த 55 ஆண்டுகள் குறித்த தனது நினைவுகளை துரை முருகன் பகிர்ந்து கொண்டார். அப்போது 55 ஆண்டுகள் கருணாநிதியை நிழல் கூட பிரிந்திருக்கலாம், ஆனால் நான் பிரிந்ததில்லை என்று தெரிவித்தார்.
நான் எனது குடும்பத்தை விட அவரின் அருகில் இருந்த நாட்கள்தான் அதிகம் எனவும் கண்கள் கசிய உருக்கமுடன் பேசினார்.
திமுக ஆட்சியில் அணைகளே கட்டப்படவில்லை என பொய்யான குற்றச்ட்டுக்களை பலர் கூறி வருகின்றனர். ஆனால் தமிழகம் முழுவதும் திமுக ஆட்சியில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் அடுத்த பிரதமர் என்றும் துரை முருகன் குறிப்பிட்டார்.