ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடப்போகும் ஆளும் கட்சி வேட்பாளர் யார்?
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் டிசம்பர் 31-க்குள் நடத்தி முடிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
ஏற்கனவே இந்தத் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு பண விநியோகம் காரணமாக கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் ஆளும் கட்சி கொடுத்தது என்று எதிர் கட்சியும், எதிர் கட்சி பணம் கொடுத்தது என்று ஆளும் கட்சியும் மாறி மாறி வீடியோ ஆதாரங்கள் தங்களிடம் இருக்கிறது என்று அமளி துமளி செய்தனர்.
அதற்குபிறகு இனி தேர்தல் எப்போது நடக்கும்? என்ற அனைவரும் எதிர்ப்பார்த்தனர். இன்னும் சிலர் இந்த ஐந்து வருடங்களை தேர்தலை நடத்தாமலேயே ஓட்டி விடுவார்களோ என்று கூட நினைத்ததுண்டு.
அந்த நிலையில்தான் டிசம்பர் 31-க்குள் தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு வெளியாகி மீண்டும் ஆர்.கே.நகரில் இடைத் தேர்தல் பரபரப்பு ஏற்பட்டுள்து. தேர்தல் களத்தை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.
பணப்பட்டுவாடா பிரச்சனையில் சிக்கிய டி.டி.வி. தினகரன் மீண்டும் போட்டியிடப் போவதாக கூறி இருக்கிறார் என்பதும், எனவே டி.டி.வி. தினகரனை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி அணியில் போட்டியிட போவது யார்? என்பதும் சுவாரசியத்தை கூட்டியுள்ளது.
இதில் முரண் என்னவென்றால் கடந்த முறை டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக எடப்பாடி பிரச்சாரம் செய்தார். ஓ.பன்னீர்செல்வம் எதிரே இருந்தார். ஆனால், இப்போது ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடியும் ஒன்றாகவும், டி.டி.வி. தினகரன் எதிராகவும் நிற்கிறார்.
அவைத் தலைவராக இருக்கும் மதுசூதனன் கடந்த முறை டி.டி.வி.யை எதிர்த்து களத்தில் நின்றார். 76 வயதாகும் மதுசூதனன் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி. 1991-ல் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார். ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக பொறுப்பு வகித்தவர்.
ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இந்தத் தொகுதியில் வசித்துவரும் மதுசூதனன் தொகுதி மக்களிடம் நன்கு அறிமுகமானவர். இதுபோன்ற காரணங்களை வைத்து டி.டி.வி.யை எதிர்த்து போட்டியிட இவர்தான் தகுதியானவர் என்று களமிறக்கப்பட்டார்.
வயது காரணமாக தீவிர பிரச்சாரத்தை அவரால் மேற்கொள்வது முடியாது என்பதால் அவருக்குப் பதில் புதிய வேட்பாளரை எடப்பாடி அணி தேடி வருகிறது.
மதுசூதனன் மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்படுவாரா? என்று செய்தியாளர்கள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் கேள்வி கேட்டனர்.
அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பாளர் தேர்வு பற்றி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.