யார் யாருக்கு அமைச்சர் பதவி? மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஹின்ட் கொடுத்த மு.க.ஸ்டாலின்..!
தமிழகத்தில் அடுத்து அமைய இருப்பது தங்கள் ஆட்சி தான் என்கிற உறுதியான நம்பிக்கையில் அமைச்சரவை பட்டியலை மு.க.ஸ்டாலின் தரப்பு இறுதி செய்து வைத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அடுத்து அமைய இருப்பது தங்கள் ஆட்சி தான் என்கிற உறுதியான நம்பிக்கையில் அமைச்சரவை பட்டியலை மு.க.ஸ்டாலின் தரப்பு இறுதி செய்து வைத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை எட்டு மணி முதல் எண்ணப்பட உள்ளது. தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்துமே மீண்டும் திமுக ஆட்சிதான் என்று கூறுகிறது. இது திமுக தரப்பிற்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்து வருகிறது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் என்று பதவி ஏற்பது, நேரம் என்ன என்பது உள்ளிட்ட தகவல்களை கூட இறுதி செய்துவிட்டதாக சொல்கிறார்கள். இதே போன்று மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் யார் யாருக்கு இடம் என்கிற விவாதமும் ஒரு வார காலமாக நடைபெற்று இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.
இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆன்லைன் மூலமாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தின் போது குறிப்பிட்ட சில மாவட்டச் செயலாளர்களை மட்டும் பெயரை அழைத்து அவர்களிடம் கூடுதல் விவரங்களை பெற்றதாக சொல்கிறார்கள். அது தவிர திமுக பெரிதும் நம்பியிருந்த அதே சமயம் பிரசாந்த் கிஷோர் டீம் எடுத்துக் கொடுத்த கருத்துக்கணிப்பில் காலை வாரிய தொகுதிகளுக்கு பொறுப்பான மாவட்டச் செயலாளர்களையும் ஸ்டாலின் ஒரு சில கேள்விகள் கேட்டதாக கூறுகிறார்கள். இது தவிர ஆன்லைன் கூட்டம் முடிந்த பிறகு மாவட்டச் செயலாளர்களில் சிலரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஸ்டாலின் பேசியதாக சொல்லப்படுகிறது.
மு.க.ஸ்டாலின் யார் யாரை எல்லாம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினாரோ அவர்கள் எல்லோருமே தாங்கள் தான் அடுத்த அமைச்சர்கள் என்கிற மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள். ஏனென்றால் மு.க.ஸ்டாலின் கேட்ட கேள்விகள் அமைச்சரவை, இலாக்காக்கள் தொடர்புடையவை என்றும் கூறுகிறார்கள். அதோடு கடந்த காலங்களில் அமைச்சர்களாக இருந்தவர்கள் பலரை ஸ்டாலின் தொடர்பு கொள்ளவில்லை என்கிறார்கள். அதிலும் கட்சியின் மிகவும் சீனியர்களாக கலைஞர் ஆட்சிக்காலத்தில் அமைச்சர்ளாக கொடிகட்டிப்பறந்த வெகு சிலரை மட்டும் ஸ்டாலின் தொடர்பு கொண்டு பேசியதாக கூறுகிறார்கள்.
ஸ்டாலின் பெரும்பாலும் பேசியது கட்சியின் மாவட்டச் செயலாளர்களாக கடந்த 2014க்கு பிறகு நியமிக்கப்பட்டவர்கள் தான் என்கிறார்கள். எனவே அமைச்சரவையில் ஸ்டாலின் கட்சியில் அதிகாரத்திற்கு வந்த பிறகு கை தூக்கிவிடப்பட்டவர்கள் தான் அதிகம் இடம்பெறுவார்கள் என்கிறார்கள். ஜெயலலிதா பாணியில் முக்கிய இலாக்கக்களும் கூட புதுமுகங்களுக்கு தான் வழங்கப்படும் என்கிறகார்கள். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித்துறை, கனிமவளத்துறை, மின்சாரத்துறை இலக்காக்கள் துரைமுருகன், பொன்முடி போன்ற சீனியர்களுக்கு கிடைக்காது என்கிறார்கள்.
கல்வித்துறை, நிதித்துறை, சுற்றுச்சூழல் துறை போன்ற இலாக்கக்கள் மட்டுமே சீனியர்களுக்கு என்றும் மற்றபடி சுகாதாரத்துறை போன்ற முக்கிய இலாக்காக்கள் அந்த துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு தானே ஒழிய சீனியாரிட்டி கிடையாது என்று முடிவெடுத்துள்ளதாக கூறுகிறார்கள். இதே போல் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதும் உறுதி என்று சொல்லப்படுகிறது. அவருக்கு அவரது தந்தை வகித்த உள்ளாட்சித்துறை ஒதுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. உள்ளாட்சித்துறை இலாகா என்றால் தமிழகம் முழுவதும் கிராமம் கிராமமாக செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் உதயநிதியை பட்டி தொட்டி எங்கும் பிரபலப்படுத்த இந்த இலாகா உதவும் என்று ஸ்டாலின் கருதுகிறார்.