சசிகலா புஷ்பா திருமணம் செய்துகொள்வதாக சொல்லப்படும் ராமசாமி யார்? வெளியானது அதிர்ச்சி தகவல்!
கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதிமுகவில் இருந்து ஜெயலலிதா இருக்கும்போதே நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவுக்கும் ஓரியண்டல் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் இணை துணைவேந்தர் ராமசாமி என்பவருக்கும் திருமணம் வரும் மார்ச் 26ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் என வாட்ஸ் அப்பில் தீயாக பரவியது ஓர் திருமண அழைப்பிதழ். சசிகலா புஷ்பா திருமணம் செய்துகொள்ளப் போவதாக கூறப்படும் வழக்கறிஞர் ராமசாமியைப் பற்றி அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் சூடாக விவாதிக்கப்படுகின்றன. ஆனால், இதுபற்றி இன்னும் சசிகலா புஷ்பா விளக்கம் அளிக்கவில்லை.
அதேநேரம் இந்த ராமசாமி யார் என்பது பற்றிய தகவல்கள் தெரிய வந்திருக்கின்றன. ‘’ஜெயல்லிதா மரணத்துக்குப் பின் அதிமுக பொதுக்குழுவை கூட்டி சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கத் திட்டமிட்டனர்.
இந்நிலையில் தான் சசிகலா புஷ்பா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் போட்டார். ’அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கு வரவேண்டுமானால், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும். ஆனால் 2011 ஆம் ஆண்டு சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கிய ஜெயலலிதா பின்பு அவரை கட்சியில் சேர்த்துக் கொள்வதாக அறிவித்தார். ஆனால், உறுப்பினர் அட்டை அளிக்கவில்லை. எனவே ஆவண ரீதியாக ஜெயலலிதா சசிகலாவை கட்சியில் சேர்த்துக் கொள்ளவில்லை.
இந்நிலையில் சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் சசிகலா புஷ்பா. இந்த வழக்கில் சசிகலா புஷ்பாவுக்காக ஆஜர் ஆனவர்தான் வழக்கறிஞர் ராமசாமி.
மேலும்... சசிகலாவின் உறுப்பினர் அட்டை பற்றியும், அவரது உறுப்பினர் பதிவு எண் பற்றியும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரை சென்று வலியுறுத்தியவரும் இதே ராமசாமி தான் இப்போது தினகரனின் ஆதரவாளராக இருக்கும் சசிகலா புஷ்பா திருமணம் செய்துகொள்ளப் போவதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன’’ என்கிறார்கள் வழக்கறிஞர்கள் வட்டாரத்தில்.
அதேநேரம் இது உண்மையான அழைப்பிதழா? அல்லது போலியா? என்பது பற்றி தூத்துக்குடியில் இருந்து டெல்லி வரைக்கும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. சசிகலா புஷ்பாவுக்கு வேண்டாத ஒரு சிலர் இதுபோன்ற திட்டமிட்டுப் பரப்புகிறார்களா, அல்லது இது உண்மைதானா என இதுவரை உறுதியாக தெரியவில்லை.
இப்படி குழப்பமாக சென்று கொண்டிருக்கும் இந்த சர்ச்சை திருமண அழைப்பிதழால், இன்று காலை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மகாளிபட்டியிலிருந்து கைக்குழந்தையோடு வந்த சத்யப்பிரியா தமக்கும் சசிகலா புஷ்பா திருமணம் செய்ய உள்ளதாக இருந்த ராமசாமிக்கும் 2014 ம் ஆண்டே திருமணம் நடைபெற்ற தாகவும் தன்னை நீதீபதி என்று சொல்லித்தான் ராமசாமி என்னை திருமணம் முடித்தார் எனக்கூறி அதற்கான ஆதாரங்களை காண்பித்த தன்னோடு அவர் கூட சேர்ந்து வாழ வேண்டும் என கண்ணீருடன் குறிப்பிட்டார் .செய்திகளில் ராமசாமி சசிகலா புஷ்பாவை திருமணம் செய்யப் போவதாக வந்த தகவல்கள் உண்மை தானா என தனக்கு உறுதி செய்யப்பட வே ண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் ஒரு வருடம் தான் ராமசாமியோ சேர்ந்து வாழ்ந்ததாகவும், அதன் பிறகு ஏற்பட்ட குடும்ப பிரச்சனையால் என்னை தந்தை வீட்டிற்கு அனுப்பி வைத்த அவர் மூலம் தன்னிடம் பேசி வந்தார் .இந்நிலையில் அவரைப்பற்றி புதிய திருமண தகவல் செய்தி வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த நான் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்திருப்பதாக கூறினார்.