தமிழகத்தின் அடுத்த டி.ஜி.பி.,யாக யாருக்கு வாய்ப்பு... ரேஸில் முந்தும் சைலேந்திரபாபு..!
சைலேந்திரபாபு அல்லது கரண் சின்கா ஆகிய இருவரில் ஒருவர் டிஜிபி.,யாக நியமிக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி., திரிபாதி இம்மாதம் 30ம் தேதி ஓய்வு பெற இருப்பதால், புதிய டி.ஜி.பி.,யாக சைலேந்திரபாபு அல்லது கரண் சின்கா ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது.
புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்ய டி.ஜி.பி., அந்தஸ்தில் உள்ளவர்களின் பட்டியல், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுஉள்ளது. அதில், மூன்று ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பெயர்களை இறுதி செய்ய வேண்டும். அதற்கான கூட்டம், டெல்லியில் 28ம் தேதி நடக்கிறது. இதில், தலைமை செயலர், உள்துறை செயலர் ஆகியோர் பங்கேற்கின்றனர். அதேபோல, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மற்றும் உள்துறை அமைச்சக மூத்த அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனர்.
மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகளான சைலேந்திரபாபு மற்றும் கரண் சின்கா ஆகியோர், 1987ல் பணியில் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு அடுத்ததாக, 1988ல் ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்வு பெற்ற சஞ்சய் அரோரா உள்ளார். தற்போது, மத்திய அரசு பணியில் இருக்கிறார். இவர்கள் மூவரும், பல்வேறு இக்கட்டான சூழலில், கமிஷனர், ஐ.ஜி., மற்றும் கூடுதல் டி.ஜி.பி.,க்களாக திறமையாக பணிபுரிந்தவர்கள். அதேபோல, டி.ஜி.பி., அந்தஸ்தில் உள்ள பிரதீப் வி பிலிப், சுனில்குமார் சிங், கந்தசாமி ஆகியோரும், குற்ற வழக்குகளை துப்பு துலக்குவதில் திறமைசாலிகள்.
இவர்களின் பெயர்களும் டி.ஜி.பி., தேர்வு பட்டியலில் உள்ளன. எனினும், சைலேந்திரபாபு அல்லது கரண் சின்கா ஆகிய இருவரில் ஒருவர் டிஜிபி.,யாக நியமிக்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.