ஸ்டெர்லைட் ஆலைக்கு நிலம் கொடுத்தது யார்..? ஸ்டாலினுக்கு கிடுக்குப்பிடி போடும் எடப்பாடி..!
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் இடம்பிடித்துள்ளன.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய நிலம் கொடுத்தது திமுக என முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், தூத்துக்குடியில் அ.தி.மு.க. - பாஜக கூட்டணி சார்பில் சங்கரபேரி பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, ’’தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய நிலம் கொடுத்தது திமுக. அப்போது தொழில்துறை அமைச்சராக இருந்தவர் ஸ்டாலின்.
ஸ்டெர்லைட் விவகாரத்தில் அதிமுக மீது பழிபோடுவது எந்த விதத்தில் நியாயம்? நமக்கு திரளும் கூட்டத்தை கண்டு ஸ்டாலின் மிரண்டு போயிருக்கிறார். ஸ்டெர்லைட் விவகாரத்தில் திமுக போடுவது நாடகம்; மக்களை ஏமாற்றுகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுத்தது அதிமுக அரசு தான்.
மக்களுக்கு சேவை செய்ய மிகப்பெரிய கூட்டணியை அமைத்துள்ளோம். வலிமையான தலைமை, வலிமையான ஆட்சியை தரக் கூடியவர் பிரதமர் மோடி. நாடு வளம்பெற மோடியே மீண்டும் பிரதமராக வர வேண்டும். சிலரின் சதியால் சட்டமன்ற இடைத்தேர்தலை சந்திக்கும் நிலை. தமிழகத்தில் வீணாக செல்லும் தண்ணீரை தேக்க, தடுப்பணை அமைக்க திட்டம் தயார் செய்துள்ளோம்’’ என அவர் தெரிவித்துள்ளார்.