மோடி அமைச்சரவையில் உ.பி. நம்பர் ஒன்..! தமிழகத்துக்கு இரு கேபினட் பொறுப்பா?
நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற வகையில் அவர்கள் தமிழ் நாடு கணக்கில் சேர்க்கப்பட்டிருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தைச் சேர்ந்த இருவர் கேபினட் அமைச்சர்களாகியிருக்கிறார்கள் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ட்விட்டரில் பெருமைப்பட்டிருந்தார்.
பிரதமர் அமைச்சரவையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்கு அதிக அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோருக்கு கேபினட் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாஜக தரப்பு கூறுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக கூட்டணி அமைச்சரவை நேற்று மாலை பொறுப்பேற்றுக்கொண்டது. மோடி தமைலையிலான அரசில் 57 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டார்கள். பாஜக அமோகமாக வென்ற மாநிலங்களுக்கு அமைச்சரவையில் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
மோடி அமைச்சவையில் மிக அதிகமாக உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளார்கள். அந்த மாநிலத்திலிருந்து 9 பேர் அமைச்சர்கள் ஆகியுள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் மகாராஷ்டிராவுக்கு 8 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய பிரதேசம், பீகாரிலிருந்து தலா 5 பேர் அமைச்சர்கள் ஆகியிருக்கிறார்கள். கர்நாடகாவிலிருந்து 4 பேரும் பேரும், குஜராத், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களிலிருந்து தலா 3 பேரும் அமைச்சர்கள் ஆகியிருக்கிறார்கள்.
தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றா மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு 2 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல பஞ்சாப், ஜார்க்கண்டைச் சேர்ந்த இருவர் அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளனர். அருணாச்சலப்பிரதேசம், அஸ்ஸாம், சட்டீஸ்கர், டெல்லி, கோவா, ஹிமாச்சலபிரதேசம், காஷ்மீர், உத்தரகாண்ட் மா நிலங்களிலிருந்து தலா ஒருவர் அமைச்சராகியிருக்கிறார்.
முதன் முறையாக கால் பதித்துள்ள தெலங்கானாவிலிருந்தும் ஒருவர் அமைச்சராகியுள்ளார். குறிப்பிடத்தக்க அளவுக்கு வாக்கு வங்கியை உயர்த்தியுள்ள கேரளாவிலும் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பெரிய மாநிலங்களின் வரிசையில் தமிழகம், ஆந்திரா மட்டும் அமைச்சரவையில் இடம் பெறவில்லை. ஆனால், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற வகையில் அவர்கள் தமிழ் நாடு கணக்கில் சேர்க்கப்பட்டிருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தைச் சேர்ந்த இருவர் கேபினட் அமைச்சர்களாகியிருக்கிறார்கள் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ட்விட்டரில் பெருமைப்பட்டிருந்தார்.
இதேபோல வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த சிக்கிம், மணிப்பூர், திரிபுரா, மிசோரம், மேகாலயா, நாகலாந்து மா நிலங்களைச் சேர்ந்தவர்கள் ஒருவரும் அமைச்சரவையில் இடம் பெறவில்லை.