அமலாபால் சொகுசு கார் விவகாரம்... வக்கீல்களின் தகுதியை ஆய்வு செய்ய சட்டத்துறை செயலரை முடுக்கிவிடும் கிரண் பேடி!
அமலா பால் சொகுசு கார் வாங்கி புதுவையில் அதை பதிவு செய்து மாட்டிக் கொண்ட நிலையில், புதுச்சேரியில் பின்னணி அரசியல் சூடு பிடித்துள்ளது.
புதுவை ஊழலின் ஊற்றுக்கண் போல் காணப்படுகிறது. தாற்காலிக முகவரிக்கு பரிந்துரை வழங்கும் அனைத்து நோட்டரி வழக்குரைஞர்களின் தகுதியையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று, சட்டத்துறை செயலருக்கு ஆளுநர் கிரண்பேடி உத்தரவும் பிறப்பித்திருக்கிறார்.
முன்னதாக புதுவை நிலை குறித்து தனது டிவிட்டர் பக்கங்களில் அடிக்கடி கருத்து தெரிவித்து வந்தார் கிரண் பேடி. புதுவையில் இதுவரை நடபெற்ற ஊழல்கள் குறித்து பட்டியல் இட்டுள்ளார் கிரண்பேடி.
அண்மைக் காலங்களில், நடந்த மெடிக்கல் சீட் முறைகேடு... இதில் சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் விசாரணை செய்ததையும் சிபிஐ வழக்கு பதிவு செய்ததையும் குறிப்பிட்டுள்ளார்.
உயர் ரக விளக்குகள் ... இதில் பொதுப்பணித் துறை ஆர்டர்களை கேன்சல் செய்ததையும் துறை ரீதியான நடவடிக்கை தொடங்கப் பட்டிருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
தொழில்நுட்ப அனுமதி பெறப்படாமல் சுற்றுலா துறையினால் வாங்கப்பட்ட படகுகள்... இதில் குறிப்பிட்ட பில் பணம் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.
இப்போது... சாலை வரி என்று குறிப்பிட்டுள்ள கிரண் பேடி, புதுச்சேரியில் தற்போது நிதி நிலை மோசமாக உள்ளதாகக் கூறுகிறார். விஐபி டீலர்களுக்கு இவ்வாறு சாலை வரியை வெகுவாகக் குறைத்து வைப்பதன் மர்மம் என்ன? இந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
புதுச்சேரியில் தற்போதைய அவசரத் தேவை, ஒரு உயர் நீதிமன்ற அமர்வு, தனிப்பட்ட ஊழல் கண்காணிப்பு அதிகாரி, சிபிஐ.,யின் கிளை எல்லாம் தேவை என்று டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் கிரண்பேடி.
Which is why UT, Puducherry, urgently needs a Bench of High Court,Independent CVO,Branch of CBI+@rashtrapatibhvn @narendramodi @rajnathsingh pic.twitter.com/cDQl4kCFUZ
— Kiran Bedi (@thekiranbedi) November 1, 2017