குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 எப்போது? அமைச்சர் தா.மோ.அன்பரசன் சொன்ன முக்கிய தகவல்..!
திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. திமுக ஆட்சிக்கு வந்து 5 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அந்த தொகை எப்போது வழங்கப்படும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் 3 மாதத்தில் வழங்க தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் தெரிவித்துள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. திமுக ஆட்சிக்கு வந்து 5 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அந்த தொகை எப்போது வழங்கப்படும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு ஆளும் திமுக தரப்பில் இன்னும் 5 ஆண்டுகள் உள்ளது. அதற்குள் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று திமுக தரப்பிலும், அமைச்சர்கள் தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வேங்கடாபுரம், குருவன்மேடு, ஆப்பூர், ரெட்டிப்பாளையம், ஆத்தூர் வேம்பாக்கம் பகுதிகளில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஈடுபட்டார். அப்போது, பெண்களுக்கான உரிமைத் தொகை வழங்கப்படவில்லையே என்று கேட்கின்றனர். கடந்த ஆட்சியில் தமிழக அரசின் கஜானாவை காலி செய்துவிட்டுச் சென்றுவிட்டனர். அதனைச் சரி செய்யும் பணியில் முதல்வர் ஈடுபட்டுள்ளார்.
அதனால் தான் மகளிர் உரிமை தொகையை வழங்க முடியவில்லை. ஒருமாதத்துக்கோ, அல்லது இரண்டு மாதங்களுக்கோ என்றால் உடனே வழங்கிவிடலாம். ஆனால் காலத்துக்கும் வழங்கக்கூடிய திட்டம் இது. எனவே, இதனைச் செயல்படுத்துவதற்காக கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. இன்னும் 3 மாதத்தில் உரிமை தொகை 1000 ரூபாய் வழங்கப்படும் என்று கூறினார்.