அன்புநாதன், சேகர் ரெட்டி டைரி என்னாச்சு? சசி அணிக்கு ஆப்பு கிடைச்சாச்சு!: ரெய்டின் பின்னணியில் முட்டி மோதும் வாதங்கள்...
ஏதோ ஒன்றை எதிர்பார்த்து ரெய்டை நடத்த அது என்னென்னவோ ஆகிக் கொண்டிருக்கிறதா? அல்லது இந்த ரெய்டில் எதிர்பார்த்தபடி எல்லாமே போய்க் கொண்டிருக்கிறதா என்பதுதான் இப்போது தமிழகம் முதல் டெல்லி வரை பலரை குடையும் கேள்வி. ஆனால் பதில் அவ்வளவு எளிதில், விரைவில் கிடைத்து விடாதுதான்.
இந்த ரெய்டின் உடனடி ரியாக்ஷன்களை சொல்வதானால் அது தினகரன் அணிக்கு சாதகமானதானதாக தோண்றுகிறது. அதாவது, ரெய்டு நடக்க நடக்க தன் வீட்டிலிருந்து வெளியே வந்த தினகரன் ’இந்த ரெய்டின் பின்னணியில் பெரிய அரசியல் இருக்கிறது. என்னையும், சின்னம்மாவையும் அரசியலில் இருந்து வெளியேற்றவே இது ஏவப்பட்டிருக்கிறது.
ஆனால் இதற்கெல்லாம் அஞ்சும் பேதைகல்ல நாங்கள்.” என்றார் வெளிப்படையாக. பின் தனக்கு ஆதரவு தோள் கொடுத்தபடி அங்கே கூடி நின்ற அ.தி.மு.க. முக்கியஸ்தர்களிடம் ...
”இந்த நேரத்தில் நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன். கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கரூரில் அன்புநாதன் என்பவர் வீட்டில் நடந்த ரெய்டில் பணமும், பணம் எண்ணும் மெஷின்களும் கூடவே ஒரு டைரியும் சிக்கியதே. அந்த டைரியிலுள்ள விபரங்களின் அடிப்படையில் முறையான விசாரணை நடந்திருந்தால் தர்மயுத்தம் நடத்தி தன்னை நல்லவராக காட்ட முயன்ற, இன்றைக்கு துணைமுதல்வர் பதவியில் உட்கார்ந்திருக்கும் நபருக்கெல்லாம் பெரிய சிக்கல் வந்திருக்குமே!
என்னாச்சு அன்புநாதன் டைரி மீதான நடவடிக்கை? அந்த டைரியின் உள் விபரங்கள் மூலமாக டெல்லி அதிகார மையத்தால் முடக்கி வைக்கப்பட்டிருக்கும் நபர்கள் யார்? அந்த டைரிக்கு பயந்து டெல்லி சொல்லியபடியெல்லாம் ஆட்டம் போட்டு தனக்கு சோறு போட்டு வளர்த்த கட்சிக்கே துரோகம் செய்பவர்களின் நிலை என்னாகும்! இதெல்லாம் மக்கள் மன்றத்தின் முன்பாக தெளிவு படுத்தப்பட வேண்டிய விஷயங்கள்.
இதைச் செய்யப்போவது யார்? ஒன்று மட்டும் சொல்கிறேன் இந்த ரெய்டால் மக்கள் மத்தியில் நமது கைசுத்தமான நிலை வெளிப்படையாகி இருக்கிறது. நாம் நிரூபிக்கப்பட்டிருக்கிறோம்.” என்று அடித்துப் பிளந்து பேசியுள்ளார். இது முழுக்க முழுக்க ஓ.பன்னீர்செல்வத்தை குறிவைத்ததே.
தினகரன் அணியை சேர்ந்த தங்க தமிழ்செல்வன் ’சேகர் ரெட்டியின் டைரியின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்?’ என்று கேட்டுள்ளார். இதுவும் பன்னீரை மையப்படுத்தியதே.
இயல்பாகவே அரசியல்வாதிகளின் விடுகளில் ரெய்டு என்றால் அதன் பின்னணியை அரசியலாகவே பார்க்கும் ஒரு மனோபாவம் கணிசமான தமிழ்மாநிலத்தவர் மத்தியில் பரவியிருக்கும் நிலையில் இந்த ரெய்டு சசி-தினகரன் அணிக்கு ஒரு வகையில் சாதகமானதே. இந்த ரெய்டு பற்றி பேசியிருக்கும் திருமாவளவன் ‘தமிழக அரசியலில் குழப்பத்தை விளைவிக்க டெல்லி முயல்கிறது’ என்று சொல்லியிருப்பதும், ஜி.கே.வாசன் “இந்த ரெய்டு குறித்து மத்திய அரசு விளக்கம் தர வேண்டும்.” என்று சொல்லியிருப்பதும் தினகரன் அணிக்கான சாதக சூழல் உருவாகியுள்ளதாக காட்டுகிறது.
ஆனால் இந்த ரெய்டின் விளைவுகளை நீண்டகால அடிப்படையில் பார்க்கப்போனால் அது வருமான வரித்துறை மற்றும் அதற்கு மேலிடத்தில் உள்ள நபர்களுக்கு ஆதாயமானதே என்று தகவல்.
அதாவது இந்த ரெய்டின் மூலம் சசி மற்றும் தினகரன் குடும்பத்தாரின் நேரடி சொத்துக்கள் குறித்து பகீர் தகவல்கள் ஏதும் சிக்கவில்லை. ஆனால் இவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டுகளின் மூலமாக இவர்களுக்கு பினாமியாக விளங்குகின்ற, இவர்களுடன் பலப்பல கோடிகளில் பிஸ்னஸில் ஈடுபட்ட, இவர்களுக்கு கோடான கோடி மதிப்பில் சொத்துக்களை விற்ற, இவர்களுக்கு பவர் எழுதிக் கொடுத்திருக்கிற, இவர்களிடமிருந்து பலப்பல கோடிகளுக்கு சொத்துக்களை வாங்கியிருக்கிற நபர்கள் பற்றிய மிக கணிசமான விபரங்கள் கிடைத்திருக்கிறது என்று ரெய்டு டீம் சைடிலிருந்து தகவல் கசிகிறது.
ஆக இப்போது கிடைத்திருக்கும் ஆவணங்களை வைத்து குறுகிய எதிர்காலத்தில் பல ரெய்டுகள் நடத்தப்படும், பலருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும், சசிகலா - தினகரன் தரப்போடு வர்த்தக தொடர்பில் இருந்த தமிழகத்தை சேர்ந்த பல பண முதலைகளின் முகத்திரை கிழிக்கப்படும் என்கிறார்கள். இதன் மூலமாக சசி அணியின் அரசியலாட்டத்துக்கு மெதுவாக ஆனால் அழுத்தமாக செக் வந்து விழும் என்றும் சொல்லப்படுகிறது.
ஆக மொத்தத்தில் இந்த ரெய்டால் யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம்? என்பது போகப்போக புரியும்...