துரோகிகளை விரைவில் வீட்டிற்கு அனுப்புவோம் - உறுதியாக நம்பும் டிடிவி தினகரன்..!!!
துரோகம் செய்தது யாராக இருந்தாலும் அவர்களை நாங்கள் விட்டுவிட மாட்டோம் எனவும், எங்களது ஆதரவு ஸ்லீப்பர் செல் எம்.எல். ஏக்கள் ஒவ்வொருவராக எடப்பாடி அணியில் இருந்து எங்கள் அணியில் இணைவார்கள் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
எடப்பாடிக்கு எதிராக 19 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கியதையடுத்து ஆட்சியை கலைக்க வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் எடப்பாடியை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தனர்.
இதனால் ஆட்சி தற்போது கலைய வாய்ப்புள்ளது என அனைவரும் எதிர்ப்பார்த்த நிலையில், தன்னை பார்க்க வந்த எதிர்கட்சி தலைவர்களிடம் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், துரோகம் செய்தது யாராக இருந்தாலும் அவர்களை நாங்கள் விட்டுவிட மாட்டோம் எனவும், எங்களது ஆதரவு ஸ்லீப்பர் செல் எம்.எல். ஏக்கள் ஒவ்வொருவராக எடப்பாடி அணியில் இருந்து எங்கள் அணியில் இணைவார்கள் எனவும் தெரிவித்தார்.
மேலும், இபிஎஸ் - ஒபிஎஸ் பதவி விலகினால் மட்டுமே இறுதி முடிவு ஏற்படும் எனவும், எடப்பாடி கூட்டத்தில் 77 எம்.எல்.ஏக்கள் மட்டுமே பங்கேற்றனர் என்பது அனைவரும் அறிந்ததே எனவும் குறிப்பிட்டார்.
அணிகள் இணைந்தாலும் சசிகலா தான் பொதுச்செயலாளர் எனவும், ஆளுநர் உரிய நடவடிக்கை எடுப்பார் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
கட்சி தலைமையில் பிரச்சனை இல்லை எனவும் ஆட்சி ஆட்சி தலைமையில் தான் பிரச்சனை எனவும் அவர் குறிப்பிட்டார்.