துபாயில் நடைபெற்று வரும் கண்காட்சியை முதலமைச்சர் இன்று துவக்கி வைக்க உள்ள நிலையில் முதலமைச்சர் துபாய் பயணத்தில் மர்மம் என்ன என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்
உலக கண்காட்சியில் தமிழகம்
துபாய் எக்ஸ்போ உலகக் கண்காட்சிகளில் மிகப் பழமையான மற்றும் மிகப் பெரிய சர்வதேச நிகழ்வுகளில் ஒன்றாகும். ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த நிகழ்வானது. ஆறு மாத காலங்களுக்கு நடைபெறும். மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் நடத்தப்படும் முதல் உலக கண்காட்சி, துபாய் நாட்டில், அக்டோபர் 1, 2021 முதல் தொடங்கி மார்ச் 31, 2022 வரை நடைபெறுகிறது. இந்த உலகக் கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கில், மார்ச் 25, 2022 முதல் மார்ச் 31, 2022 வரை, தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்பட உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உலகக் கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கினை இன்று திறந்து வைக்கிறார்கள். தொழில் துறை, மருத்துவம், சுற்றுலா. கலை, கலாச்சாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி, தமிழ் வளர்ச்சி, தகவல், மின்னணுவியல், தொழிற் பூங்காக்கள். உணவுப் பதப்படுத்துதல் போன்ற முக்கிய துறைகளில் தமிழ்நாட்டின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டும் வண்ணம் காட்சிப்படங்கள் இந்த அரங்கில் தொடர்ச்சியாக திரையிடப்படவுள்ளன.

துபாய் மர்மம் என்ன?
இந்தநிலையில் முதலமைச்சர் துபாய் பயணம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார், அதில் இந்த மாத இறுதியோடு துபாய் கண்காட்சி நிறைவடையவுள்ளதாக தெரிவித்தவர்,இந்த நிலையில் தான் தற்போது தமிழக அரங்கை முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளதாக தெரிவித்தார். இத்தனை காலம் திறக்காமல் இப்போ திறப்பதற்கு காரணம் என்ன என்றும் கேள்வி கேட்டார். மேலும் முதலமைச்சர் துபாய் செய்வதற்கு முன் அவரது குடும்பத்தினர் பல முறை துபாய் சென்று வந்ததாக கூறினார். தற்போது முதலமைச்சர் தனது குடும்பத்தோடு மீண்டும் துபாய் சென்றுள்ளதாகவும் கூறினார். , எனவே துபாய் மர்மம் என்ன? என்று கேள்வி எழுப்பியவர் அங்கு என்னதான் நடக்கிறது என்று புரியவில்லை எனவும் கூறினார்.

5000 கோடி மர்மம் என்ன?
வார நாளிதழ் ஒன்றில் தமிழகத்தில் இருந்து 5000 கோடி ரூபாய் துபாய் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக கூறியவர், அந்த 5000 கோடியின் மர்மம் என்னவென்றும் கேள்வி எழுப்பினார். முதலமைச்சர் குடும்பம் அடிக்கடி துபாய் செல்வதற்கு காரணம் என்ன? எனவும் வினவினார். முதலமைச்சர் ஏதோ ஒரு தவறு செய்வதற்காகதான் துபாய் கண்காட்சி என்று காரணம் கூறுவதாக குற்றம்சாட்டினார். தமிழக மக்கள் நலனுக்காக முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் செல்லவில்லையெனவும் அப்போது அண்ணாமலை தெரிவித்தார்.
