‘எனது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தில் இணைவேன்’ பா.ஜனதா,ஆர்.எஸ்.எஸ்க்கு மாயாவதி எச்சரிக்கை
தாழ்த்தப்பட்ட, பிற்பபடுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக அட்டூழியங்களில் ஈடுபடுவதை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக நிறுத்திக்கொள்ளாவிடில், தனது ஆதரவாளர்களுடன் புத்தமதத்திற்கு மாறப்போவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மயாவதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாநாடு
மஹாரஷ்டிர மாநிலம் நாக்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநாடு நடைபெற்றது.
ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் நடந்த இந்த மாநாட்டில் அக்கட்சித் தலைவர் மாயாவதி கலந்து கொண்டு பேசியதாவது:-
21 ஆண்டுகள் அவகாசம்
‘‘பாபாசாகேப் அம்பேத்கர், இந்துவாக பிறந்த நான், இந்துவாக சாக விரும்பவில்லை என இதே நாக்பூரில் 1935-ம் ஆண்டில் ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.
இந்து மத தலைவர்களுக்கு அவர் 21 ஆண்டுகள் அவகாசம் வழங்கினார். ஆனால், அவர்கள் செயல்பாடுகளில் எந்த மாற்றமும் இல்லை. எனவே 1956-ம் ஆண்டு நாக்பூரில் அவர் புத்தமதத்திற்கு மாறினார்.
தொடர்ந்து சுரண்டல்
இதுபோன்ற மத மாற்றத்தால் இந்து சமூக தலைவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொண்டு, தலித் மற்றும் பிறப்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய மரியாதையை வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
ஆனால், அவர்கள் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை தொடர்ந்து சுரண்டுகிறார்கள்.
கோடிக்கணக்கான ஆதரவாளர்களுடன்
தலித் மற்றும் பிறப்படுத்தப்பட்ட மக்களையும், அவர்களின் தலைவர்களையும் ஜாதி ரீதியாகவும், மதரீதியாகவும் மரியாதை குறைவாக நடத்துவதை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நானும், எனது கோடிக்கணக்கான ஆதரவாளர்களும் புத்தமதத்திற்கு மாறுவோம்.
ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜவினர் தங்கள் செயல்பாடுகளை சீர்திருத்தக் கொள்ளவும், மனநிலையை மாற்றிக் கொள்ளவும் வாய்ப்பு தருகிறேன். இல்லையென்றால் உரிய நேரத்தில் நான் மதம் மாறுவேன்’’.
இவ்வாறு அவர் கூறினார்.
‘மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல்’
மாநாட்டில் பேசிய மாயாவதி மேலும் கூறியதாவது-
‘‘மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் வருவதற்கு வாய்ப்புள்ளது. எனவே பகுஜன் சமாஜ் தொண்டர்கள் இப்போதே தேர்தலுக்கு தயாராக வேண்டும். மக்களவை தேர்தலுக்கு முன், அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணியை தொடங்க பாஜக திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசின் மோசமான செயல்பாடுகளால் கடுமையாக விமர்சனத்திற்கு ஆளாகிவரும் நிலையில், இதுபோன்ற சதித்திட்டத்தை செயல்படுத்த திட்டமிடுகிறது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்து தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்று வருகிறது. வாக்குச்சீட்டு முறைப்படி தேர்தல் நடத்தி தேர்தலை சந்திக்க பாஜக தயாரா?.’’
இவ்வாறு அவர் கூறினார்.