We will not set up Cauvery Management Board - Chiththaramaya
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு தொடக்கம் முதலே கர்நாடகா எதிர்த்துவருவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கின் விசாரணை தேதி குறுப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், மைசூரில் தசரா தொடக்க விழாவில் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, காவிரி வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக கருத்து மட்டுமே தெரிவித்துள்ளனர்; உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை என தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தொடக்கம் முதலே கர்நாடகா எதிர்த்துவந்துள்ளது. அந்த வகையில் நம்தரப்பு வாதங்களை உறுதியாக எடுத்துரைக்கவும் கர்நாடக விவசாயிகள் பாதிக்கப்படாததை உறுதிசெய்யவும் வழக்கறிஞர்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன். எனவே காவிரி வழக்கு தொடர்பாக விவசாயிகள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என சித்தராமையா பேசினார்.
தங்கள் மாநில விவசாயிகள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் கர்நாடக அரசு உறுதியாக இருப்பதை முதல்வரின் இந்த பேச்சு தெளிவாக காட்டுகிறது. ஆனால் இதுபோன்ற உறுதியான ஒரு உத்தரவாதத்தை தமிழக அரசு இதுவரை வழங்கியுள்ளதா? உண்மையாகவே தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு செயல்படுகிறதா? என்பன போன்ற பல கேள்விகள் எழுகின்றன.
