ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வேன் என்றார் ஸ்டாலின். ஆனால், தற்போது நீட் தேர்வுக்கு தயாராகச் சொல்கின்றார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். 

மதுரையில் செல்லூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்துக்கு ஏற்பட்ட எல்லா பாதிப்புகளும் திமுக ஆட்சியில் இருந்தபோதுதான் நடந்திருக்கிறது. கச்சத்தீவு, ஸ்டெர்லைட், முல்லைப் பெரியாறு, காவிரி உள்பட பல பிரச்சனைகளுக்கு திமுக அரசுதான் காரணம். முதல்வர் மு.க. ஸ்டாலின் வீர வசனம் பேசிக்கொண்டு டெல்லி சென்றார். ஆனால், டெல்லியில் எதுவும் நடக்கவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வேன் என்றார் ஸ்டாலின். ஆனால், தற்போது நீட் தேர்வுக்கு தயாராகச் சொல்கின்றார். பொதுமக்களிடம் பொய் சொல்லியே ஆட்சிக்கு வந்த ஒரே கட்சி திமுக மட்டுமே.
டெல்லியில் பேட்டி அளிக்கும்போது, உரிமைக்கு குரல் கொடுப்போம் என்கிறார் ஸ்டாலின். ஆனால், அதிமுக மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து மத்திய அரசுடன் போராடி இருக்கிறது. ஆனால், அடிமை அரசு என்று விமர்சித்த ஸ்டாலின் டெல்லி சென்று என்ன சாதித்தார்? கோ பேக் மோடி என்று திமுகதான் சொன்னது. என்றாலும், ஸ்டாலினை மரியாதையுடன் நடத்தியிருக்கிறார் மோடி. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட அதிமுக ஆட்சியில் இருந்தே தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. எம்ஜிஆர் இரட்டை வேடத்தில் நடித்த எல்லாப் படங்களுமே பெரிய வெற்றி பெற்றுள்ளன. 
அதேபோல இரண்டு தலைவர்கள் கீழ் அதிமுக வெற்றி நடைபோடுகிறது. அதிமுகவை பிளவுப்படுத்தும் வேலைகளை பலரும் செய்கிறார்கள். அதிமுக ஆட்சியில் பல மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், திமுக எத்தனை மதுக்கடைகளை அடைத்துள்ளது? உள்ளாட்சித் தேர்தல் வரைதான் திமுக கூட்டணி நீடிக்கும். அதன் பிறகு மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் எல்லாம் பிரிந்துவிடும். சட்டப்பேரவையில் ஸ்டாலினை போல சட்டையைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்து நாடகம் போட மாட்டோம். உண்மையாகவே எங்களுடைய எதிர்ப்புகளை ஆக்கப்பூர்வமாக சபைக்கு உள்ளே விவாதம் செய்வோம்.” என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார்.