தலையே போனாலும் தேமுதிகவை தலைகுனிய விடமாட்டோம்.. அதிமுகவை அதிர வைத்த விஜயபிரபாகரன்..!
உடல்ரீதியாக தேமுதிக தலைவர் விஜயகாந்தை இனி முழுமையாக கொண்டு வர முடியாது என விஜயபிரபாகரன் தகவல் தெரிவித்துள்ளார்.
உடல்ரீதியாக தேமுதிக தலைவர் விஜயகாந்தை இனி முழுமையாக கொண்டு வர முடியாது என விஜயபிரபாகரன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதகால அவகாசமே இருப்பதால், ஆளும் அதிமுக, எதிர்க்கட்சி திமுக ஆகிய கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதிப்பங்கீட்டை தீவிரப்படுத்தியுள்ளனர். எப்படியாவது 3வது முறையாக ஆட்சி அமைத்துவிட வேண்டும் என திமுகவைவிட அதிமுக தான் அதிவேகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
இந்நிலையில், அதிமுக தனது கூட்டணிக் கட்சியான பாமகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்குவதாக உடன்பாடு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்படி 2 கட்ட பேச்சுவார்த்தையில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் விஜயகாந்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது 12 தொகுதிகள் முதல் 15 தொகுதிகள் வரை ஒதுக்கலாம் அதற்கு மேல் முடியாது என அதிமுகவினர் கூறிவிட்டனர். ஆனால், பாமகவுக்கு நிகரான தொகுதியை ஒதுக்க வேண்டும் என தேமுதிகவினர் திட்டவட்டமாக கூறிவிட்டனர். இதனால், 3-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தேமுதிகவினர் செல்லாமலேயே புறக்கணித்துவிட்டனர். ஆகையால், அதிமுகவினர் கூட்டணியில் இருந்து தேமுதிக எந்நேரத்திலும் வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பெரம்பலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஜயபிரபாகரன்;- நாங்கள் நினைத்தால் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தனித்து நின்று வெற்றி பெற முடியும். உடல்ரீதியாக விஜயகாந்தை இனி முழுமையாக கொண்டு வர முடியாது. தலையே போனாலும் தேமுதிகவை தலைகுனிய விடமாட்டோம் என விஜயபிரபாகரன் தகவல் தெரிவித்துள்ளார்.