தேர்தல் முடிந்ததும் அதிமுகவில் சசிகலாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் டி.டி.வி.தினகரன் ஒதுக்கி வைக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. 

சசிகலாவை சமாதானப்படுத்த எடப்பாடி பழனிசாமி தூது அனுப்பியதாக ஒரு தகவல் உலா வருகிறது. தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று கர்நாடகத்தில் இருந்து தமிழகம் வரும் வழியில் ஆதரவாளர்களிடம் பேசிய சசிகலா, அந்தர் பல்டி அடித்து அரசியலை விட்டே ஒதுங்க நினைத்தது ஏன் என்பதற்கு தினம் ஒரு தகவல் பரவி வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனுப்பிய தூது காரணமாகத்தான் அந்த முடிவை அவர் எடுத்ததாக ஒரு தகவல் பரவுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

எடப்பாடி சார்பாக தூது சென்றவர் சசிகலாவிடம், ‘’நீங்க சொன்னபடிதான் முதல்வரும் ஆட்சியை நடத்திட்டு வர்றாரு. இடையில தினகரனால் சில குழப்பங்கள் ஏற்பட்டுவிட்டது. அதனால்தான் அவரை வெளியேற்ற வேண்டியதாகிவிட்டது. பாஜக தரப்பில் சில அழுத்தங்களையும் சமாளித்துக்கொண்டு வருகிறோம். இதை புரிந்துகொள்ளாமல் ஆடிக்கொண்டிருக்கிறார் தினகரன். இதை சிறையில் இருக்கும் தங்களிடத்தில் தெரியப்படுத்த பலமுறை முயன்றும் தினகரன் அதற்கெல்லாம் முட்டுக்கட்டை போட்டுவிட்டார். 

வெளியே வந்த பிறகும்கூட உங்களை சந்திக்க பெரும்பாடு படவேண்டியதாகிவிட்டது. இப்போதும் கூட திமுகவுடன் சேர்ந்துகொண்டு அதிமுகவுக்கு எதிரான வேலைகளை பார்க்கிறார் தினகரன். ஆனால், திமுகவை அழிக்க அதிமுகவோடு இணைய தயார் என்று வெளியே ஒப்புக்காக பேசிக்கொண்டிருக்கிறார்.

சிறையில் இருந்து வந்ததும், கோயில் கோயிலாக சென்று மனமுருக வேண்டும் என்றுதான் நீங்கள் நினைத்ததாக கேள்விப்பட்டார் முதல்வர். இப்போதைக்கு எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் அதையே செய்யச்சொல்லி இருக்கிறார் முதல்வர். இந்த தேர்தலில் எப்படியாவது ஜெயிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஜெயித்ததும், உங்களுக்கு உரிய மரியாதையை கொடுக்க இருப்பதாக முதல்வர் சொல்கிறார். இது சத்தியம்.’’எனக் கூறி இருக்கிறார். இந்த சந்திப்புக்கு பிறகுதான், அரசியலை விட்டே விலகுவதாக சசிகலா அறிவித்துள்ளார். ஆக தேர்தல் முடிந்ததும் அதிமுகவில் சசிகலாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் டி.டி.வி.தினகரன் ஒதுக்கி வைக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.