மதுக்கடைகள் திறப்பதை என்றுமே ஆதரிக்கமாட்டோம்... திமுக அரசுக்கு அதிர்ச்சி கொடுத்த காங்கிரஸ்..!
மதுக்கடைகள் திறக்கப்படுவதை காங்கிரஸ் கட்சி கொள்கை ரீதியாக என்றுமே ஆதரிக்காது அக்கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று சற்று குறைந்ததையடுத்து, கொரோனா வைரஸ் தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறக்க எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. டாஸ்மாக் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜக, நாதக ஆகிய கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி டாஸ்மாக் கடையைத் திறப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாளையொட்டி தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னை அடையாறில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற கே.எஸ்.அழகிரி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மதுக்கடைகள் திறக்கப்படுவதை காங்கிரஸ் கட்சி கொள்கை ரீதியாக என்றுமே ஆதரிக்காது. கர்நாடக அரசுக்கு மேகதாது அணையை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கக் கூடாது. இது அரசியல் அல்ல. லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை என்பதை மத்திய அரசு உணர வேண்டும்” என்று கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.
மதுக்கடைகள் திறந்ததற்கு எதிர்க்கட்சிக்ச்ள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.