we will give all needs to coimbatore - cm
கோயம்புத்தூர்
கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு என்னென்ன தேவையோ அவற்றை நிறைவேற்றி தன்னிறைவு பெற்ற மாவட்டமாக திகழச் செய்வோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கோயம்புத்தூர் காந்திபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தமிழக அரசின் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் சார்பில் ரூ.195 கோடி செலவில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
இதன் முதலடுக்கு மேம்பாலத்தின் திறப்பு விழா காந்திபுரத்தில் நேற்று மாலை நடைப்பெற்றது.
இந்த விழாவிற்கு சட்டசபைத் துணைச் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலை வகித்தார். புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும், கோவை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்டப் பகுதிகளில் நிறைவேற்றப்படவுள்ள திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டி வைத்தார்.
அப்போது அவர் பேசியது:
“கோயம்புத்தூர் மாவட்டத்துக்கு என்னென்ன தேவையோ அவற்றை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். இந்தப் பாலத்தில் நெரிசலைப் போக்குவதற்காக ரௌண்டானா அமைக்க வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டுக் கொண்டார். அந்த கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட்டு ரௌண்டானா அமைக்கப்படும்.
முந்தைய திமுக ஆட்சியில் திட்டங்கள் சரியாக திட்டமிடாமல் கொண்டுவரப்பட்டன. ஆனால், அதிமுக ஆட்சியில் திட்டங்கள் சரியாக திட்டமிடப்பட்டுப் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
கோயம்புத்தூரில் உப்பிலிபாளையம் முதல் விமான நிலையம் வரை ஒன்பது கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.900 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இது தவிர மேற்கு புறவழிச்சாலை அமைப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசு மக்களின் அரசு. மக்களுக்கான அரசு. மக்களின் தேவைகள் என்னவோ அதை நிறைவேற்றி தருவது அதிமுக அரசு மட்டும்தான்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு கோயம்புத்தூர் தன்னிறைவுப் பெற்ற மாவட்டமாகத் திகழும்” என்று அவர் பேசினார்.
