நாங்க பார்க்காத சிறையா..? மார்தட்டும் அமைச்சர் ஜெயக்குமார்..!
தினகரனை திருடன் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
முதல்வர் பழனிச்சாமி அரசுக்கு எதிராக செயல்பட்டுவந்த பன்னீர்செல்வம் அணி, பழனிச்சாமியுடன் இணைந்து ஆட்சி தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், தற்போது தினகரன் அணி தனித்து செயல்பட்டு வருகிறது.
தன் கட்டுப்பாட்டில் கட்சியும் ஆட்சியும் இருக்க வேண்டும் என கருதும் தினகரன், அப்படி இல்லாதபட்சத்தில் ஆட்சியைக் கலைத்துவிடும் எண்ணத்தில் செயல்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது. தினகரனை கட்சிப் பொறுப்பிலிருந்து கழற்றிவிட்டு முதல்வர் பழனிச்சாமி தலைமையிலான அணி ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது.
சசிகலாவையும் தினகரனையும் ஆராதித்துவந்த அமைச்சர்கள், தற்போது கழுவி ஊற்றி வருகின்றனர்.
சென்னையில் நடந்த அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்ட விழாவில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், பணத்தை வைத்து தலைவராகிவிடலாம் என தினகரன் நினைப்பதாகவும் ஆனால் அது ஒருபோதும் நடக்காது எனவும் விமர்சித்தார்.
அரசியல் ரீதியாக ஜெயலலிதாவுக்காக 8 முறை தற்போதைய அமைச்சர்களில் பலர் சிறைக்கு சென்றிருக்கிறோம்; வேலூர், சென்னை புழல், கடலூர் என அனைத்து சிறைக்கும் சென்றிருக்கிறோம்; ஆனால் தினகரன் எதற்காக சிறை சென்றார்? திருடனுக்கும் தியாகிக்கும் வித்தியாசம் இருக்குல? என தினகரனை திருடன் என விமர்சித்தார் அமைச்சர் ஜெயக்குமார்.
அந்நிய செலாவணி மோசடி வழக்கில் தினகரன் சிறை சென்றதை சுட்டிக்காட்டும் வகையில் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.