“ 19 மாநிலங்களை ஆள்கிறோம்; இந்திரா ஆட்சியில்கூட காங்கிரஸ் இப்படி இல்லை” பிரதமர் மோடி பெருமிதப் பேச்சு
இந்திரா காந்தி ஆட்சியில் கூட காங்கிரஸ் கட்சி 18 மாநிலங்களில் தான் ஆட்சியில் இருந்தது, ஆனால், இப்போது நாம் 19 மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறோம் என்று பிரதமர் மோடி பா.ஜனதா நாடாளுமன்றக் கூட்டத்தில் பெருமிதத்தோடு பேசினார்.
பா.ஜனதா கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் குஜராத் மற்றும் இமாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான முதல்வர்களை தேர்வு செய்தல், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட வேண்டிய விவகாரங்கள் குறித்த ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்த கூட்டத்தில், குஜராத் மற்றும் இமாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த பா.ஜனதா. எம்பிக்கள் பலர் இன்று பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற உழைத்ததற்கு அந்தந்த மாநில எம்.பி.க்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.
குஜராத் மாநிலத்தில்6-வது முறையாக பா.ஜனதா ஆட்சி அமைக்க உதவிய பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து, இனிப்புகளை வழங்கினார் கட்சியின் தலைவர் அமித் ஷா. அதன்பின் எம்.பி.க்கள் மத்தியில் பிரதமர் மோடி உணர்ச்சி பொங்க பேசுகையில், “ இந்திரா காந்தி ஆட்சியில்கூட காங்கிரஸ் கட்சி 18 மாநிலங்களில்தான் ஆட்சியில் இருந்தது. ஆனால், இப்போது, பா.ஜனதா கட்சி 19 மாநிலங்களை ஆட்சி செய்து வருகிறது என்று பேசியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அது மட்டுமல்லாமல், 2019ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும், மக்களிடத்தில் அதிருப்தி வரவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி எச்சரித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.
இந்த கூட்டம் குறித்து மத்திய அமைச்சர் அனந்தகுமார் கூறுகையில், “ குஜராத் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் எடுத்த முயற்சி நகைப்பில் முடிந்து, தோல்வியாக அமைந்துவிட்டது என பிரதமர் மோடி பேசினார். குஜராத் வெற்றி நம்பகத்தன்மையாகஇல்லை என ராகுல் காந்தி பேசியுள்ளார். எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தேவையில்லாத, அர்ப்பமான கருத்துக்களை கூறிவருகின்றன. குறிப்பாக பிரதமர் மோடி குறித்தே நம்பகத்தன்மையை எழுப்புகின்றன. இது எதற்கும் தொடர்பில்லாதது” என்றார்.