அதிகாரங்களைப் போராடித்தான் பெறவேண்டி இருக்கிறது... கமல்ஹாசன் வேதனை..!
சட்டசபை கூட்டம், உள்ளாட்சி தேர்தல் ஆகியவை நடக்கும். ஆனால், கிராம சபை கூட்டம் மட்டும் நடக்காது. அ.தி.மு.க.,விற்கும், தி.மு.க.,விற்கும் எந்த வித்தியாசமும் இல்லை
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் அதிகாரங்களைப் போராடித்தான் பெறவேண்டி இருக்கிறது'' என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கடந்த சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ல் கிராம சபை கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், ‛‛கொரோனாவில் சட்டசபை தேர்தல், ஓட்டு எண்ணிக்கை, சட்டசபை கூட்டம், உள்ளாட்சி தேர்தல் ஆகியவை நடக்கும். ஆனால், கிராம சபை கூட்டம் மட்டும் நடக்காது. அ.தி.மு.க.,விற்கும், தி.மு.க.,விற்கும் எந்த வித்தியாசமும் இல்லை'' என விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று, கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கிராம சபை கூட்டம் நடைபெறும் இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் அரசாணையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில், ’’கிராம சபைகளை நடத்தும் அதிகாரத்தில் மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட முடியாது என பஞ்சாயத்துத் தலைவர் ஒருவர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் அதிகாரங்களைப் போராடித்தான் பெறவேண்டி இருப்பதன் அடையாளம் இது'’எனத் தெரிவித்துள்ளார்.