மக்களே... 2000 ரூபாய் கிடைக்கவில்லையா..? அதற்கு மு.க.ஸ்டாலின் தான் காரணமாம்..!
ஏழைக்குடும்பங்களுக்கு வரவேண்டிய ரூ.2000 பணத்தை கொடுக்கவிடாமல் தடுத்தவர் என மு.க.ஸ்டாலின் மீது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
ஏழைக்குடும்பங்களுக்கு வரவேண்டிய ரூ.2000 பணத்தை கொடுக்கவிடாமல் தடுத்தவர் என மு.க.ஸ்டாலின் மீது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
நெல்லை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், ’’சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக விளங்குவோம். முத்தலாக் சட்டத்துக்கு எதிராக குரல் கொடுத்தோம். தமிழகத்தில் மத சண்டையோ, சாதி சண்டையோ நடந்தால் அதிமுக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கும்.
எனவே மக்களை வைத்து அரசியல் செய்து அதன் மூலம் ஆதாயம் தேடும் கட்சி அதிமுக இல்லை. மக்களுக்கு எதை செய்ய முடியுமோ அதை அறிவிக்கின்றோம். செய்கின்றோம். ஆனால் அப்படியல்ல திராவிட முன்னேற்ற கழகம், ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிடுவார்கள். அந்த தேர்தல் அறிக்கை, அந்த தேர்தலோடு முடிந்து போய்விடும்.
எப்படி அதெல்லாம் நடைமுறைப்படுத்த முடியும். அதனால் தான் அந்த அறிக்கைகளை பொய் என்கிறோம். ஜெயலலிதா சிறப்பாக ஆண்டதாலேயே, ஆளுங்கட்சி 32 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். காங்கிரஸ் கூட்டணியில் மாநிலத்துக்கு மாநிலம் கருத்து வேறுபாடு உள்ள கட்சிகள் இணைந்து இருக்கின்றன. ஆந்திராவிலே ஒருநிலைப்பாடு, கேரளாவிலே ஒருநிலைப்பாடு, உத்தரப்பிரதேசத்திலே ஒருநிலைப்பாடு என இருக்கிறார்கள்.
பிரதமர் பதவி ஆசையில் இருக்கும் இவர்கள் எல்லாம் எப்படி ஒன்றுகூடி எப்படி பிரதமரை தேர்ந்தெடுப்போம் என கூறுகிறார்கள். ஆனால் பாரதிய ஜனதா கூட்டணி மோடி தான் பிரதமர் வேட்பாளர் என்பதை அறிவித்துள்ளது. நாடு செழிக்க, வளம் பெற மோடி தான் மீண்டும் பிரதமராக வரவேண்டும். திருமண உதவித்தொகை திட்டம், கல்வி உதவித்தொகை திட்டங்களை அதிமுக அரசு செய்துள்ளது பிறந்த குழந்தை கருவில் இருக்கும் போதே உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அளித்துள்ளோம். பொங்கல் பரிசாக ரூ.1000 கொடுத்தோம். அடுத்து ஏழை மக்களுக்கு வறட்சி நிதியாக 2000 கொடுக்கப்படும் என அறிவிப்பு கொடுத்தோம். தேர்தலுக்கு முன்பு கொடுக்க நினைத்தோம், ஆனால் ஸ்டாலின் தேர்தல் ஆணையத்துக்கு புகார் கொடுத்ததால் கொடுக்க முடியாமல் போய்விட்டது. தேர்தலுக்கு பிறகு ரூ.2000 பணம் கொடுப்போம்’’ என அவர் தெரிவித்தார்.