என்ன...! போயஸ் கார்டன் அசுத்தமாக இருந்ததா? அதிமுகவுக்கு கேள்வி எழுப்பும் காங்கிரஸ்..!
போயஸ் கார்டன் சுத்தமாக்கப்படுவதாக அன்வர் ராஜா கூறிவருவதாகவும் ஏற்கனவே போயஸ் கார்டன் அசுத்தமாக இருந்ததா? எனவும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள் என சசிகலாவுடன் தொடர்புடைய அனைவரின் வீடுகள் மற்றும் நிறுவனங்களிலும் நடத்தப்பட்ட சோதனையின் தொடர்ச்சியாக போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் நேற்றிரவு வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனையின்போது, இரண்டு லேப்டாப்கள் மற்றும் 2 பென் டிரைவ்களை அதிகாரிகள் எடுத்து சென்றதாக விவேக் ஜெயராமன் தெரிவித்தார். ஜெயலலிதாவின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதன் பின்னணியில் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தின் துரோகம் இருப்பதாகவும் அதற்காக அவர்கள் ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும் எனவும் தினகரன் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.
இதைதொடர்ந்து ஜெயலலிதாவின் வீட்டில் நடத்தப்படும் சோதனையால் ஜெயலலிதாவிற்கு களங்கம் ஏற்படாது எனவும் களங்கம் துடைக்கப்படும் எனவும் பழனிசாமி ஆதரவாளரான அன்வர் ராஜா எம்பி தெரிவித்தார்.
இந்நிலையில், போயஸ் கார்டன் சுத்தமாக்கப்படுவதாக அன்வர் ராஜா கூறிவருவதாகவும் ஏற்கனவே போயஸ் கார்டன் அசுத்தமாக இருந்ததா? எனவும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வருமானவரி சோதனையில் அதிமுக அணிகளிலேயே மாறுபட்ட கருத்து நிலவுவதாகவும் சோதனை குறித்து முதலில் ஈபிஎஸ், ஓபிஎஸ் தங்களது கருத்தை வெளிப்படுத்த வேண்டும் எனவும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.