விழுப்புரம் கோரச்சம்பவம்! கொந்தளித்த நடிகர் பிரசன்னா! கருத்து தெரிவிக்காத ரஜினி, கமல்...!
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆராயி என்பவர் தனது 8 வயது மகன் மற்றும் 14 வயது மகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். ஆராயியின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார்.
அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென்று வீட்டுக்குள் புகுந்து 3 பேரையும் பயங்கர ஆயுதத்தால் சராமாரியாக தாக்கியுள்ளனர். இந்ததாக்குதலில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆராயி இந்த தாக்குதலில் படுகாயமடைந்தார்.
அந்த மர்ம கும்பல் 14 வயது மகள் தனத்தை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்து தப்பிவிட்டது. இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த அரகண்டநல்லூர் போலீசார், படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தற்போது துவிர அரசியல்வாதிகளாக உருவெடுத்துள்ள நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன், இது குறித்து பேட்டியோ, கருத்தோ எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்த கோர சம்பவத்துக்கு நடிகர் பிரசன்னா தனது டுவிட்டர் பக்கத்தில், விழுப்புரத்தில் ஆராயி மற்றும் அவரின் 8 வயது மகன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஒரு பிரபலத்தின் மரணத்தால் மட்டுமே அதிகம் பேசப்படாமல் இருக்கிறதா? அல்லது வேறு காரணமா? என கேள்வி எழுப்பி இருந்தார்.
சிஸ்டம் சரியில்லை என்று கூறி நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு நுழைந்துள்ள நிலையிலும், தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று கூறி அரசியலில் நுழைந்துள்ள நடிகர் கமல் ஹாசனும், இந்த கோர சம்பவம் குறித்து எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.