விளாத்திகுளத்தில் வெளுத்தெடுக்கும் மார்கண்டேயன்... ஓ.பி.எஸ்- எடப்பாடி அதிர்ச்சி..!
இடைத்தேர்தலில் சீட் கிடைக்காத விரக்தியில் அதிமுக செய்தித் தொடர்பாளரும், எம்.எல்.ஏவுமான மார்கண்டேயன் கட்சியை விட்டு விலகி தனியாக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
இடைத்தேர்தலில் சீட் கிடைக்காத விரக்தியில் அதிமுக செய்தித் தொடர்பாளரும், எம்.எல்.ஏவுமான மார்கண்டேயன் கட்சியை விட்டு விலகி தனியாக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.
விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தனக்கு சீட் கிடைக்கும் என மார்க்கண்டேயன் அதீத நம்பிக்கையில் இருந்து வந்தார். ஆனால், சின்னப்பனை வேட்பாளராக அறிவித்துள்ளது அதிமுக தலைமை. மார்க்கண்டேயன், தெற்கு மாவட்டச் செயலாளர் சண்முநாதனின் தீவிர ஆதரவாளர். சின்னப்பன், வடக்கு மாவட்டச் செயலாளரும், செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவின் ஆதரவாளர்.
இதனால் விரக்தி அடைந்த மார்கண்டேயன் கட்சியை விட்டு விலகினார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சீட் கிடைக்கவில்லை என்கிற ஆதங்கத்தில் தான் நான் கட்சியை விட்டு விலகினேன். விளாத்திகுளத்தில் தனியாக போட்டியிட உள்ளேன். கடம்பூர் ராஜூ போன்றவர்களுக்குப் கட்சியை வழிநடத்துகிற ஆற்றல் இல்லை. சீட் கிடைக்கவில்லை என்பதற்காக நான் கட்சியை விட்டு விலகவில்லை. சீட் இல்லாமல் எத்தனையோ தேர்தல்களில் வேலை செய்திருக்கிறோம். சின்னப்பனுக்கு சீட் கொடுத்தது எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.
ஆனால், கடம்பூர் ராஜூ போன்றவர்கள் கட்சியை வழிநடத்துகிறோம் எனக் கூறிக்கொண்டு கட்சியை அழித்துக் கொண்டு இருக்கிறார்கள். அதனை தலைமைக்கு உணர்த்தவே கட்சியை விட்டு விலகினேன். கடம்பூர் ராஜூ போன்றவர்களால் வெற்றியை பெற்றுத் தர முடியாது. அதிமுகவை தோறகடிக்க முடிவெடுத்துளார் கடம்பூர் ராஜூ. தேர்தலுக்கு பிறகு அதிமுக ஒரே தலைமையின் கீழ் ஒன்று சேரும்’’ என அவர் தெரிவித்தார்.