ஜெயலலிதாவையே எதிர்த்து சவுண்டுவிட்டவன் நான், ஆனா சாதாரண எடப்பாடியை எதிர்க்க திராணியில்லாதவர் ஸ்டாலின்: கேப்டன் தாறுமாறு!
திருப்பூர் சிட்டியின் புஷ்பா திரையரங்கம் அருகே அலைமோதும் கூட்டம். காற்றில் முன் தலைமுடி பறக்க மைக் பிடித்த விஜயகாந்த் ‘வாய்க் கொழுப்பா பேசுறார் விஜயகாந்துன்னு ஸ்டாலின் சொல்லியிருக்கார். எனக்கு நீ சோறு போட்டியா, இல்ல உங்கப்பா சோறு போட்டாரா! கொழுப்பேறி கிடக்க? உங்க வண்டவாளமெலாம் எனக்கு தெரியாதா! இந்த நாட்டுக்கே விஞ்ஞானமா ஊழலை சொல்லிக் கொடுத்தது கலைஞர்தானே?’ என்று வெளுத்தெடுக்க, கூட்டம் ஆர்ப்பரித்து அடங்கியது.
தி.மு.க.வை திட்டுவதற்கென்றே கட்சி ஒன்றை நடத்தி அந்த அரசியலில் வெற்றியும் பெற்றார் விஜயகாந்த். ஆனால் சமீப காலமாக தொடர் தோல்விகளாலும், உடல் நிலை பிரச்னைகளாலும் அரசியல் ரீதியாக சரிந்து கிடக்கும் அவர் இப்போது ஸ்டாலின் மேலிருக்கும் கோபத்தில் ‘கலைஞர் ரொம்ப நல்லவரு’ எனும் டைப்பில் பேச துவங்கியிருப்பதுதான் ஹைலைட் தலையெழுத்தே!
“இந்த மாநிலத்துல உள்ள எல்லா கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய நபர்களும் கலைஞரை சந்திச்சு நலம் விசாரிக்க டைம் கேட்டா கொடுக்கிறார் ஸ்டாலின். இவ்வளவு ஏன் வார்த்தைக்கு வார்த்தை தான் திட்டுற மோடியையே வாசல் வரைக்கு வந்து கூட்டிட்டு போயி அப்பாவை காண்பிச்சு, நலம் விசாரிக்க வெச்சார். ஆனா இந்த விஜயகாந்த் டைம் கேட்டா மட்டும் கொடுக்க மாட்டேங்கிறார்.
அவருக்கு என் மேலே எப்பவுமே ஒரு பிரச்னை இருக்குது. கடந்த சட்டமன்ற தேர்தல்ல தே.மு.தி.க. கூட கூட்டணி வைக்க ஆசைப்பட்டார் கலைஞர். ஜெயிச்சால் அவர் முதல்வர், நான் துணை முதல்வர் அப்படின்னு பேசப்பட்டுச்சு. ஆனா நான் கேட்ட தொகுதிகளை அவங்க தரலை. நான் எவ்வளவோ இறங்கி வந்தும் பிடிவாதமா மறுத்துட்டாங்க தொகுதி விஷயத்துல. 40 தொகுதிகளுக்கு மேலே தர மறுக்க காரணமே ஸ்டாலின் தான். எங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு தடுத்தவர் கடைசியில அ.தி.மு.க.வுட்ட ஆட்சியை பறி கொடுத்துட்டு வயிறெரிஞ்சு நிக்குறார்.
என் கையில வெறும் 29 எம்.எல்.ஏ.க்களை வெச்சுக்கிட்டு ஜெயலலிதாவை எதிர்த்து சட்டசபையில செம சவுண்டா அரசியல் பண்ணினவன் நான். ஆனா 89 எம்.எல்.ஏ.க்களை வெச்சுக்கிட்டு இந்த சாதாரண எடப்பாடியை எதிர்க்க திராணியில்லாம முழிக்கிறார். சட்டசபையில தன் சட்டையை தானே கிழிச்சுக்கிட்டு போஸ் கொடுக்குறார். அன்னைக்கு அந்தம்மா தி.மு.க. ஆட்சியில சேலையை கிழிச்சுக்கிட்டு டிராமா போட்ட மாதிரி இவரு இப்போ டிராம போடுகிறார் அவ்ளோதான்.
கலைஞர் மட்டும் இப்போ நல்லா இருந்தார்னா இந்நேரம் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்த்து முடிச்சிருப்பார். ஆனா ஸ்டாலினுக்கு எங்களை திட்டிப் பேசுறதுக்கு மட்டும்தான் நேரமிருக்குதே தவிர ஆளுகிற மைனாரிட்டி அரசை கவிழ்க்க திராணியில்லை. எம்.ஜி.ஆர். 13 வருஷம் தி.மு.க.வை தலையெடுக்க முடியாம செய்து வைத்திருந்தார். அதன் பிறகு கலைஞர் ஆட்சிக்கு வரலையா, அதேமாதிரி நாங்களும் ஒரு நாள் ஆட்சி அமைப்போம்.” என்று ஏகத்துகும் கருணாநிதியை புகழ்ந்த கையோடு, ஒரு நாள் தான் முதல்வராவேன் என்று இன்னமும் நம்பிக்கை காட்டுகிறார் கேப்டன்.
ஹும்! நம்பிக்கை, அதானே எல்லாம்!