Vijayendra issue Comment on Vairamuthu Twitter
தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் சம அளவில் மதிக்கப்பட வேண்டியவை என்று கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் - சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஆளுநர் பன்வாரிலால் பிரோகித், மத்திய அமைச்சர்கள், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, நீதிபதிகள், பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ் - சமஸ்கிருதம் அகாராதியை, ஹெச். ராஜாவின் தந்தையும் மறைந்த பேராசிரியருமான அரிகரன் எழுதியது. இந்த நூல் வெளியீட்டு விழா நேற்று
சென்னையில் நடைபெற்றது.

நூல் வெளியீட்டு விழா துவங்கியவுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது மேடையில் இருந்த அனைவரும் எழுந்து நின்றனர். இதன் பின்னர், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. ஆளுநர் உட்பட அனைவரும் நின்றிருந்த நிலையில், விஜயேந்திரர் நாற்காலியில் அமர்ந்து கொண்டார். அவரின் இந்த செய்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, விஜயேந்திரர், தியானத்தில் இருந்தார் என்று காஞ்சி சங்கர மடம் விளக்கம் அளித்தது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காந்திய மக்கள் கட்சியின் நிறுவனர் தமிழருவி மணியன், மதுரை ஆதீனம் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன், விஜயேந்திரர் எழுந்து நிற்காதது தவறான முன்னுதாரணம் என்று கூறியுள்ளார்.

ஆண்டாள் குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்ததாக கூறி கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது நாற்காலியில் விஜயேந்திரர் அமர்ந்திருந்தது குறித்து, வைரமுத்து டுவிட்டர் ஒன்றில் பதிவிட்டுள்ளார். அதில், தேசிய கீதம் என்பது தாய் நாட்டை மதிப்பது; தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தாய்மொழியை மதிப்பது; இரண்டும் சம அளவில்
மதிக்கப்பட வேண்டும். என்று கூறியுள்ளார்.

