திருப்பத்தூர் மாவட்டத்திற்கு திருப்பம் தரும் விஜயகுமார் ஐபிஎஸ்... ஒரு வித்தியாசமான முயற்சி..!
திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல்துறையில் பல புதுமைகளை எஸ்.பி. விஜயகுமார் செயல்படுத்தி வருவதை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
வேலூர் மாவட்டத்துடன் இருந்த திருப்பத்தூர் கடந்த ஆண்டு புதிய மாவட்டமாக உருவானது. புதிய மாவட்டமாக உருவான பிறகு மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக விஜயகுமார் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார். திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.யாக விஜயகுமார் நியமிக்கப்பட்ட பிறகு சட்டம் - ஒழுங்கு, போக்குவரத்து, குற்றச்செயல், வழிப்பறி, திருட்டு, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது யோசிக்காமல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும், காவல் நிலையங்களில் கட்டப் பஞ்சாயத்து, வாகனச் சோதனையின்போது பொதுமக்களிடம் அநாகரிகமாக நடந்துகொள்வது போன்ற ஒழுங்கீனமான செயல்களை யாரும் செய்யக்கூடாது என்ற உத்தரவையும் விஜயகுமார் பிறப்பித்தார்.
இதுபோன்ற உத்தரவுகள் பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றன. திருப்பத்தூர் மாவட்டத்தில் காவல்துறையில் பல புதுமைகளை எஸ்.பி. விஜயகுமார் செயல்படுத்தி வருவதை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
காவல்துறையில் பணியாற்றி வரும் அனைத்துக் காவலர்களின் பணியினை ஊக்குவிக்கும் வகையில் 'வாரத்தின் சிறந்த காவலர்' என்ற பாராட்டுப் பத்திரமும், ரூ.500 ஊக்கத்தொகையும் காவல்துறையினருக்கு வழங்கப்படும் என எஸ்.பி. விஜயகுமார் அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில் வாகன விபத்துக்களை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன் ஒருபகுதியாக, திருப்பத்தூரில் விபத்தை குறைக்கும் வகையில் நிபுணர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களை அறிய வாட்ஸ்-அப் எண்ணையும் வெளியிட்டு இருந்தார். இதனையடுத்து கூகுள் வரைபடத்தில் ஜி.பி.எஸ் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட விபத்து பகுதிகளை கண்டறிந்து புவியல் படத்தை வெளியிட்டுள்ளார்.
விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க நிபுணர்கள், அல்லது பிறரின் கருத்துக்கள் விபத்தை குறைக்க உதவும் வகையில் வரவேற்கப்படுகின்றன. அவர்கள் உரிய ஆலோசனைகளை வழங்கினால் பாராட்டப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.