விஜயகாந்தின் எளிமை - சாலையில் 'கார் பேனட்'டில் இலை போட்டு சாப்பிட்டதால் தொண்டர்கள் நெகிழ்ச்சி
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பயணத்தின் இடையே எளிமையாக சாலையிலேயே நின்றபடி உணவருந்திய காட்சிகள் வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பரபரப்புக்கு பெயர் போனவர் , யதார்த்தமானவர். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர் என்பார்கள்.
அரசியலில் நடிக்க தெரிய வேண்டும். கண்ணீர் விட்டு விசும்பி அழத்தெரிய வேண்டும்.
தொண்டர்களிடம் கோபப்படாமல் சிரித்துகொண்டே சென்று , தனியறையில் தொண்டர்களை கூப்பிட்டு வந்த பொறுப்பாளரை வெளுக்கவேண்டும் போன்ற அரசியல் நியதிகள் தெரியாதவர். இது இவரது பலவீனமும் , பலமும் ஆகும்.
வருங்கால முதல்வர் என மக்கள் நலக்கூட்டணியால் உச்சத்திற்கு வைக்கப்பட்டிருந்த தர்மர் இன்று முச்சந்தியில் உணவருந்தும் நிலை வந்த போதும் கேப்டன் அது பற்றி கவலைப்பட்டதில்லை. அவர் பாட்டுக்கு அவர் வேலையை தொடர்ந்து செய்து கொண்டுத்தான் இருக்கிறார்.
இன்று மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் கலந்து கொள்ள ஈரோட்டிலிருந்து நேற்று காலை புறப்பட்ட விஜய்காந்த் விஜயகாந்த் நேற்று மதியம் சென்னிமலை அருகே வந்தார்.
கார்கள் பராவலசு வரத்தக்காடு என்ற இடம் அருகே மதியம் வந்தது. அப்போது மதிய சாப்பாடு நேரம் ஆனதால் வழியில் ஒரு தோட்ட வீட்டு முன்னர் மர நிழலில் காரை நிறுத்த சொன்னார் விஜயகாந்த்.
விஜய்காந்த் மற்றும் அவருடன் உடன் 4 கார்களில் வந்த கட்சிக்காரர்கள் அங்கேயே மதிய உணவை உண்ண முடிவு செய்தனர்.
அடையாளம் தெரியாமல் இருக்கவும் வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்கவும் விஜயகாந்த் தலையில் முண்டாசு கட்டிகொண்டார். கார் பேனட் மீது தலவாழை இலை போட்டு உணவு பரிமாற ருசித்து சாப்பிட்டர் விஜயகாந்த். அவ்வழியே சென்றவர்களுக்கு அங்கு சாலையில் நின்று சாப்பிடுவது விஜய்காந்த் என்று தெரியாததால் சாதாரணமாக தாண்டி சென்று கொண்டிருந்தனர்.
அந்த தோட்ட வீட்டின் உரிமையாளர் முருகேஷ் வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் வெளியே சென்றிருந்தார். வீட்டுக்கு திரும்பிய அவர் வீட்டு வசல் முன்னால் நான்கு கார்கள் நிற்பதும் முண்டாசு கட்டிய மனிதர் சாப்பிட்டு கொண்டிருப்பதையும் பார்த்து ஐயா நீங்கல்லாம் யாரு என்று அடையாளம் தெரியாமல் கேட்க முண்டாசை எடுத்த விஜய்காந்த்தை பார்த்ததும் அவர் அதிர்ச்சியடைந்து விட்டார்.
நிழலாக இருக்குதேன்னு உங்கள் வீட்டு பக்கம் ஒதுங்கினோம் என்று கூறியுள்ளார். அண்ணே தாராளமாக வரலாம் வாங்க உள்ளே என்று வீட்டினுள்ளே அழைத்து சென்றுள்ளார் முருகேஷ்.
பின்னர் வீட்டில் ஓய்வு எடுத்துவிட்டு விஜயகாந்த் மதுரை புறப்பட்டு சென்றார். ஸ்டார் ஓட்டலில் தங்கினாலும் , இருக்கும் சூழ்நிலையில் கார் பேனட் மீது கூட இலை போட்டு சாப்பிடும் விஜயகாந்தின் எளிமை சற்று வித்யாசமானது தான்.