vijayakanth condemns haj subsidy cancel
நடப்பு ஆண்டு முதல் ஹஜ் புனித யாத்திரைக்கான மானியம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். அதேநேரம், இந்த ஆண்டில் முஸ்லிம் பெண்களின் கல்விக்காக சுமார்ரூ.700 கோடி மானிய நிதி செலவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும் தமிழகத்திலும் பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில், இந்திய திருநாட்டில் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் வருடம் தோறும் ஹஜ் புனித பயணம் செல்வது வழக்கமான ஒன்று. இதற்கு மத்திய அரசு ஆண்டுதோறும் மானியம் வழங்கிவந்தது.
ஆனால் இந்த ஆண்டு மத்திய அரசு ஹஜ் புனித பயணம் செல்லும் இஸ்லாமியர்களுக்கான மானியத்தை திடீர் என்று நேற்று முதல் ரத்து செய்ததை அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.
ஒரு அரசாங்கம் என்பது அனைத்து மதங்களுக்கும் சமமான ஒரு அரசாக இருக்கவேண்டும். மேலும் மானியத்தை நிறுத்துவதென்றால் அனைத்து மதத்திற்கும் இந்த நிலைபொருந்தும். அரசாங்கம் வழங்கும் மானியம் என்பது அனைத்து மதங்களுக்கும் சமமாக வழங்கவேண்டும்.
மதங்களை பார்த்து மானியத்தை வழங்குவதை தேமுதிக என்றைக்கும் வரவேற்காது. பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள ஹஜ் புனித பயணத்திற்கான மானியத்தை மத்திய அரசு திடீர் என்று ரத்துசெய்துள்ளதை தேசிய முற்போக்கு திராவிட கழகம் வன்மையாக கண்டிக்கிறது. எனவே மத்திய அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்து ஹஜ் புனித பயணத்திற்கான மானியத்தை வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்வதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
