அ.தி.மு.க. மாவட்ட செயலாளரா தனபால்: வெடித்துக் கிளம்பிய விஜயதாரணி...
தமிழக காங்கிரஸின் சென்சிடிவ் எம்.எல்.ஏ. விஜயதாரணி. எந்தளவுக்கு மீடியா டார்லிங்கோ அந்தளவுக்கு முன்கோபமும் உண்டு. சபாநாயகரையே பொசுக்கென்று விமர்சித்து தன் கட்சியனரை அலற வைத்திருக்கிறார்.
சட்டசபையில் நேற்று ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் ‘விலை போன அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்’ என்று சொல்லி டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் ஸ்டிங் ஆப்பரேஷன் விவகாரத்தை எடுத்து வைத்து விளையாண்டு கொண்டிருந்தார்கள்.
அப்போது கேள்வி நேரம் வந்தது. துணை கேள்வி எழுப்ப, காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணிக்கு வாய்ப்பு வழங்கினார் சபாநாயகர் தனபால். இவரும் எழுந்து தன் கேள்வியை தொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் இவர் முடிக்கும் முன்பாக குறுக்கிட்ட சபாநாயகர், ‘நீங்கள் தனி கேள்வி கேளுங்கள். இப்போ அமருங்கள்.’ என்றார்.
இதில் டென்ஷனான விஜயதாரணி சபாநாயகருடன் வாக்குவாதம் செய்தார். இதை அ.தி.மு.க. பெண் எம்.எல்.ஏ.க்கள் சிலர் கண்டித்து கோஷமிட்டனர். விஜயதாரணியோ அவர்களுக்கும் பதில் கண்டனங்களை சொல்லியபடி, சபாநாயகரிடம் வாக்குவாதத்தையும் தொடர்ந்தார். இதில் சபாநாயகரே டென்ஷனாகி ‘நீங்கள் பேசியது அவைக்குறிப்பில் இடம் பெறாது. சபாநாயகர் உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும் நீங்கள்.’ என்றார். உடனே அமர்ந்தாலும் கூட தாரணியின் ஆதங்கம் தீரவில்லை. சபாநாயகரின் பாரபட்ச நடவடிக்கைகளை பற்றி குறை சொல்லியபடியே இருந்தார்.
அவரை சக எம்.எல்.ஏ.க்கள் சமதானம் செய்தனர்.
இந்நிலையில் சிறிது நேரத்தில் வெளிநடப்பு செய்து வெளியேறினர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள். அப்போது மீடியாவிடம் சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராமசாமி, “ஆளுங்கட்சியில் இருந்து என்ன சமிஞை வருகிறதோ அதற்கு தக்கபடி சபாநாயகர் செயலப்டுகிறார். எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட விவகாரம் குறித்து பேச அனுமதிக்கும்படி எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கேட்டார். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. நாங்கள் கேட்டபோது எங்களுக்கும் மறுக்கப்பட்டது. பல முறை கேட்டு அனுமதி அளிக்காததால் அதை கண்டித்து வெளிநடப்பு செய்தோம்.” என்றார்.
அப்போது அங்கிருந்த விஜயதாரணி ‘அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் போல் சபாநாயகர் செயல்படுகிறார்.’ என்று ஒரே போடாக போட்டு அத்தனை பேரையும் அதிர வைத்தார்.
ஆனாலும் இது ஓவரோ ஓவர் விமர்சனம் மேடம்!